பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வல்லிக்கண்ணன்


மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடைபெறும் திருமுறை சொற்பொழிவுகளின் போதும்,

சென்னை மல்லீசுவரர் கோவிலில் குருகுலம் அழகரடிகள் நிகழ்த்தி வந்த திருக்குறள் சொற்பொழிவுகளின் போதும்,

திரு.வி.க. அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபாவில்நடைபெற்று வந்த வார சொற்பொழிவுகளின் போதும்,

சிந்தாதிரிப்பேட்டை வேதாந்த சங்கத்தில் நடைபெற்றுவந்த தமிழ் வகுப்புகளின் போதும்,

பிரபுலிங்க லீலையைப் பாடமாக நான் கேட்க வேண்டும் எனக் கருதி திரு.வி.க. மணிமண்டபத்தில் லால்குடி நடேச முதலியார் நடத்திய வகுப்புகளின்போதும், சைவ சிந்தாந்த பெருமன்ற சொற்பொழிவு ஒன்றின்போது பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் போதும் என்னுடைய தேடுதலில் குறுக்கும் நெடுக்குமாக ஞானியாரடிகள் வந்து சென்று கொண்டே இருந்தார்.

1950களின் இறுதிகளிலிருந்து என்னைத் தொடரும் அவர்க்கு என்னிடமிருந்து அவரைப் பற்றிய சித்திரம் ஒன்று வேண்டுமல்லவா? அவரைப் பற்றிய என் கருத்தமைவுக்கு ஒரு வடிகால் தேவையல்லவா? அதற்காகவே நட்பானது போலவே காஞ்சிபுரம் அ.நா. பாலகிருஷ்ணன் அவர்களது தொடர்பு எனக்கு வாய்த்தது.

மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட, பெரும்பாலும் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்ட, ஒருவரின் பணிகளைப் பல அறிஞர்களின் கட்டுரைகளின் வழி நினைவு கூர்வதும், அவரது வரலாற்றை அக்கட்டுரைகளோடு இணைத்து நூலாக்கி வெளியிட முன்வந்ததும் பயன் எதிர்பார்த்து செய்யும் செயலாக கண்டிப்பாக இருக்க முடியாது. அவர் முன்வந்ததன் விளைவு தான் ஞானியாரடிகளைப் பற்றி இக்கட்டுரை.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிகள் மறைந்து சிற்றரசுகளாய், பாளையங்களாய் ஆட்சிகள் பலபட நிகழ்ந்து வந்தபோது தமிழகத்தில் கி.பி.16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை சைவாதீனத்தார் காலமாக விளங்கியது. இக்கால கட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய, சமய வாழ்வில் அவை சிறப்பான பங்காற்றின. இச்சமுதாய, சமய ஆளுமை என்பது கூட அரசியல் சார்ந்ததாகவே இருந்தது.