பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

91

வளர்ந்தருளினார்கள். பெற்றோர் சிலகாலம் குருநாதர் ஆணைப்படியே திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்தில் தங்கி யிருந்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் மடாலய நான்காங் குருநாதர், பழநியாண்டியாம் இளங்குழவியைச் சிறு பருவத்திலேயே பல நல்ல பழக்கங்களில் ஈடுபடுத்தினார்கள். 'தளர் நடையிட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறி விழுவதெல்லாம் குருவாம் தாய் தந்தையின் மீதே, இளங்குழவிப் பதங் கடந்து எழுத்தறியுங் காலம் வந்துற்றபோது, நான்காம் குருநாதர், சென்ன கேசவலு நாயுடு என்பாரைத் தம் இருப்பிடத்திற்கு வருவித்துத் தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். சில ஆண்டுகட்குள், தெய்வத் திருக்குழந்தை தெலுங்கு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தது. தெலுங்கு கற்ற காலம், நான்கு ஆண்டுகளாகும் என அடிகளார் கூறியுள்ளார்கள்.

தாய் மொழியும் ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியிற் பின்னர்சேர்ந்து, கருத்துடன் பயின்றார்கள். பள்ளியிற் பயிலுங் காலத்தில் தம் குருநாதர்க்குப் பூசனை புரியப் பூக்கொய்தல், நீராடிப் பூசனைக்கு வேண்டும் நீர் முகந்து, வடித்தெடுத்துத் தூய்மையுடன் வைத்தல், சந்தனம் அறைத்தல், தீபமிடல் போன்ற பற்பல தொண்டுகளிலும் ஈடுபட்டு, யாவற்றையும் ஏவுவாரின்றியே சிறப்புடன் அமைத்து வைத்து விடுவார்கள். பின் தம் ஆன்மார்த்த பூசனையை முடித்துக் கொண்டு காலந் தவிராமல் பள்ளி சென்று வருவார்கள்.

சிறு பருவத்திலேயே வீரசைவ சமய தீட்சை பெற்று நியமம் தவிராமல் கடமைகளைச் செய்தல் வேண்டும் என்ற முறைப்படி சுவாமிகள், தமக்கிடப் பெற்ற கடமைகளைச் சிறக்கச் செய்து முடிப்பதோடு, தம் குருநாதரோ, மடாலயத்தின் குறிப்பறிந்து காலங் கடவாமல்செய்து முடிப்பதிற் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கே துயிலுணர்ந்து, தம் பாடங்களைப் படித்தலும், எழுத்து வேலைகளை முடித்தலும், இறைவன் மீது திருமறைப் பாக்களை ஓதுதலும் அவர்களது நியமங்களாம் இங்ஙனம் வெளிச்சம் நன்கு வரும் வரை செய்திருந்துவிட்டு, வெளிச்சங் கண்டவுடன் நித்திய கருமங்களை முடித்துப் பூக்குடலை கொண்டு திரு நந்தனவனம் சேர்வார்கள். ஆங்கு பூக்களையும் பத்திரங்களையும் பறிக்கும் போதெல்லாம் இறைவன் மீதல்லாது வேறெதிலும் சிந்தை செலுத்தாமல், விநாயகரகவல். திருவாசகத்துச்