உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

பிற்கு வழி காணாது புலம்பியும், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் கிடைக்காததால், இழிநிலை பெற்றும், தமிழர் உழல்கின்றனரே!

குன்றிலிருந்து கிளம்பும் காற்றும், ஊருக்குள் செல்கிறோம், மக்களுடன் உறவாடி மகிழச் செல்கிறோம், செல்லுங்காலை, எமைக்காண வந்த இளங்காற்றே! எமக்களிக்க எது கொணர்ந்தனை? என்று கேட்டிடின் என்ன செய்வது என்று எண்ணிப்போலும், மலர்ந்த கொன்றையின் மணத்தை வாரிக்கொண்டு வந்து தருகிறது; இளவாடை! தென்றல் வீசும்போது, இனியதோர் குளிர்ச்சி மட்டுமா! அந்தத் தென்றல் தமிழகத்தில் வீசுகிறதல்லவா, தமிழர், தென்றலுக்கே வாசம் அளிக்கின்றனர்—செழுஞ்சாந்தின் மணம் பெறுகிறது தென்றல்! இவ்விதமெல்லாம் இருந்த ‘செல்வ வீதி’களிலே இன்று காண்பது என்ன? இன்றைய நிலையை எண்ணி எண்ணி ஏக்கமுறும்போது, எதிரே வந்து நின்று காமராஜர், “ஓலமிட்டுக் கிடப்பானேன்—நீதான் நக்கீரன் பரம்பரையாயிற்றே!” என்று கேலி பேசுகிறார். தமிழகம் எத்துணை தாழ் நிலையில் இருக்கிறது என்பதற்கு நான் ஓர் நடமாடும் சான்று என்று கூறிக்கொள்கிறார்!!

நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்ற நெஞ்சுறுதி கொண்டோராகத் தமிழர் இருந்த நாட்களில், சிங்களம், புட்பகம், யவனம், சீனம், சோனகம், வங்கம், மகதம், கலிங்கம், காந்தாரம், காமரூபம்—எனும் எண்ணற்ற நாடுகள் பலவும், தமிழகத்தின் திருவைக் கண்டு வியந்தன, திறனைக் கண்டு அஞ்சின, செருமுனைக்கு வரப் பயந்தன, தோழமைக்குக் காத்துக் கிடந்தன! இமயம் தொட்டு நின்ற அரசுகள் அனைத்தும் தமிழர் முரசு கொட்டுகின்றனர் என்று அறிந்தால், தமது அரசுகட்டில் ஆடிட அச்சம் கொண்டனர்.

கலிங்கத்துப் பரணி இதனைக் காட்டி நிற்கிறது.

கனக—விசயர் காதை இதனை அறிவிக்கிறது.

கடாரம் கொண்டான். கங்கை கொண்டான், இமய வரம்பன்—என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உள்ளன—ஒவ்வொன்றும் ஒவ்வோர் வீரக் காதையை விளக்குவன!

அவ்விதம் புகழ் பரப்பி வாழ்ந்த தமிழன் இன்று, அடி பணிந்தும், அடிமையாகியும், உரிமை இழந்தும், உதவாக்கரை நிலை பெற்றும், இழிந்து கிடக்கிறானே, இந்த நிலை மாற வழி என்ன என்கிறோம்—காமராஜர், நீதான் நக்கீரன்