பக்கம்:தம்ம பதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பதினொன்று

முதுமை

144. இந்த உலகம் எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கையில், இங்கே என்ன சிரிப்பு? இங்கே என்ன களியாட்டம்? இருளால் மூடப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் ஒளியைத் தேடுவதில்லை? (1)

145. இந்த உடலாகிய வர்ணம் தீட்டிய பொம்மையைப் பார்! இது புண்கள் நிறைந்தது, (எலும்புகளாலும் சதையாலும்,) ஒன்றாகக் கோத்து வைக்கப்பட்டது. நோய்க்கு இடமானது, பல எண்ணங்கள் நிறைந்துள்ளது, ஆனால் நிலையில்லாதது! (2)

146. இந்த உடல் நலிந்து தேய்வது, இது நோய்களின் கூடு, மிகவும் நொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப்போகும்; வாழ்வின் முடிவு சாவுதான். (3)

147. சரத்காலத்தில் காற்றில் பறக்கும் சுரைக்கொடி போன்ற இந்த வெள்ளை எலும்புகளைப் பார்ப்பவனுக்கு என்ன இன்பம் இருக்கிறது? (4)

148. அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி’ ஊனும் உதிரமும் கலந்த சாந்து பூசப்பட்டிருக்கிறது; இதிலே வசிக்கின்றன முதுமையும், மரணமும், கர்வமும், கபடமும். (5)

149. அரசர்களுடைய அழகிய தேர்களும் அழிவடைகின்றன. அவ்வாறே உடலும் மூப்படைந்து அழியும். ஆனால் நல்லோரின் தருமம் மட்டும் ஒரு போதும் முதுமை யடைந்து பழுதாவதில்லை. இவ்வாறு நல்லவர் நல்லவர்களுக்கு உபதேசம் செய்கின்றனர். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/43&oldid=1381835" இலிருந்து மீள்விக்கப்பட்டது