பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி



தான்பிரீன் 1919 செப்டம்பரில் பிரிகிட் மலோன் என்னும் மாதினால் சிகிச்சை செய்யப்பட்டு வந்த விஷயம் முன்னரே கூறப்பட்டிருக்கிறது. அம்மாதே அவனுடைய மனைவியானாள். அவளுடைய கவனத்தினாலும் ஆதரவினாலுமே அவன் விரைவாகக் குணமடைய முடிந்தது. பிரிகிட்டும் அவளது சகோதரி ஆன்னியும் அவனைத் தங்கள் குடும்பத்தானாகவே கருதி உபசரித்து வந்ததை அவன் என்றும் மறந்ததில்லை. அவன் மலோன் குடும்பத்தாரைக் கண்டமுதல், நாளுக்கு நாள் அவர்களுடைய நேசப்பான்மை வளர்ந்து வந்து, கடைசியாக அக்குடும்பத்தைச் சேர்ந்த கட்டிளங்கன்னியை அவனே மணந்து கொள்ளவும் நேர்ந்தது. 1920லேயே தான்பிரீனும் பிரிகிட்டும் மனந்து கொள்வதென்று முன்கூட்டி உறுதி செய்து கொண்டிருந்தனர்.

டிரம் கொண்டரா சண்டைக்குப்பின்னால் தான்பிரீன் காயமடைந்து கிடக்கையில் பிரிகிட் அடிக்கடி சென்று அவனைப் பார்த்துவந்தாள். தான்பிரீனை மணந்து கொள்வதில் எத்தனை கஷ்டங்கள் இருந்தன என்பதைப் பிரிகிட் அறியாதவளல்ல. அவன் எந்த நிமிஷம் பகைவரால் சுடப்படுவான் என்பது நிச்சயமில்லை. அவனுடைய அன்புக்குப் பாத்திரமான மனைவி என்ற காரணத்தால் பிரிகிட்டையும் பட்டாளத்தார் இரவு பகல் எந்த நேரத்திலும் கொடுந் துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள். அக்காலத்தில் அவனுடன் நட்பாயிருப்பதே குற்றம், அதிலும் மனைவியாயிருப்பது எவ்வளவு பெரிய குற்றம் ஒற்றர்கள் பிரிகிட்டின் வீட்டை, நினைத்தபொழுதெல்லாம் சோதனை போடுவார்கள். 'உன் கணவன் எங்கே?' என்று கேட்டு அவளைச் சித்திரவதை செய்வார்கள். இத்தனை துன்பங்களும் அவளுக்கு வெகு நன்றாய்த் தெரிந்திருந்தும், அவள் எதையும் பொருட்படுத்தாது, அந்த வீர சிங்கத்தையே காதலித்து மணந்து கொள்ள இசைந்தாள். தான்பிரீனும் அவளை மணந்து கொள்வதால் தேசியப் போராட்டத்தில் தனக்கு அதிக வலிமையாகும் என்று கருதினான்.

திருமணத்தன்று தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி ஒரு பெரிய மன்னரைக் கெளரவிப்பது போலிருந்தது. கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு ஸீன் ஹோகன், டின்னி லேவலி முதலிய தோழர்கள் தான்பிரீனுடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தனர். இரவுமுழுவதும் அவர்கள் உறங்காது தங்கள் தோழனைக் கேலி செய்வதும், அவனுக்கு உபதேசங்கள் செய்வதுமாகக் காலங்கழித்தனர். பகைவர்களுடைய குண்டுகளுக்கெல்லாம் தப்பிய தான்பிரீன் தோழர்களுடைய தாக்குதலுக்குத் தப்பமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்!

திருமணத்தில் நண்பர் யாவருக்கும் பெரிய விருந்தளிக்கப்பட்டது. அன்று முழுவதும் எங்கும் ஆண்களும் பெண்களும் ஆனந்தமாய்ப் பாடவும் ஆடவுமாயிருந்தனர். இரவில் எல்லோரும் நடனம் செய்தனர். பட்டாளத்தார் வந்து விடாமல் வெளியிடங்களிலே காத்துக் கொண்டிருந்த தொண்டர்கள் இடையிடையே வேறு தொண்டர்களைத் தங்கள் இடங்களில் வைத்துவிட்டு வந்து, தாங்

13Ꮾ