பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


திப்பெரரியின் தென்பாகம் ராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதாவது அரசாங்கத்தார் அங்கு ராணுவச்சட்டத்திற்கு நிகரான கொடிய சட்டத்தை அமுல் நடத்த ஆரம்பித்தனர். எங்கும் போலிஸூம் ராணுவமும் குழுமி நின்றன. கண்ட இடமெல்லாம் பாணாத்தடிகளும் போலிஸ் இயந்திரத்துப்பாக்கிகளும் நின்றவர், நடந்தவர், சந்தேகிக்கப்பட்டவர், யாரும் சோதிக்கப்பட்டனர். வீடுதோறும் சோதனை, தெருக்கள் தோறும் பாதுகாப்பு சந்தைகள், கூட்டங்கள், விழாக்கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒரு சிறு சம்பவம் ஆங்கில அரசாங்கத்தின் சகல சக்திகளையும் கிளப்பிவிட்டு விட்டது. அதன் கோர உருவத்தை உலகுக்குத் திறந்துகாட்டி விட்டது.

மேற்கொண்டு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் இருந்து தான்பிரீன் முதலியோர், தங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கும், பிடிப்பதற்குத் துப்புக் கூறுவோர்க்கும் ஆயிரம்பவுண்டு பரிசு பொடுப்பதாக அரசு விளம்பரப் படுத்தியிருந்ததைத் தெரிந்து கொண்டனர். பின்னால் இந்தப் பரிசு பதினாயிரம் பவுண்டாக உயர்த்தப்பட்டது. அவர்களுடைய தலைகளின் விலை பதினாயிரம் பவுண்டு என்று தீர்மானிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் அதிக எச்சரிகையுடன் நடமாட வேண்டியிருந்தது. மக்களில் யாரும் அவர்களைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் போலிஸாரில் சிலர்மட்டும் பரிசு பெறும் நோக்கத்துடன் ஊருராய்த் தேடினார்கள். நாளடைவில் அவர்களும் சிரத்தை குறைத்து ஒதுங்கிவிட்டனர்.

64