பக்கம்:தாய்லாந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னபுரிக்குத் திரும்ப அனுப்பப்பட்டோம். ‘நாங்பிளாதுக்’ என்ற இடத்தில் ஒரு முகாமில் நான் வைக்கப்பட்டேன். அங்கே ஜப்பானியர் வந்து வெள்ளைத் தோல் கொண்டவர்களைப் பிடித்து ஜப்பானுக்குக் கொண்டு போனார்கள். குளிரையும், பனியையும் வெள்ளைத் தோல் தாங்கும் என்பது அவர்களின் கணிப்பு.

ஆயில் டாங்க்கர் கப்பல் ஒன்றில் நாங்கள் மூவாயிரம் பேர் அமர்ந்து ஜப்பான் போனோம். கிட்டத்தட்ட ஒரு மாதம் துறை முகத்திலேயே உட்கார்ந்திருந்தோம். சாப்பாடு கிடையாது. அழுக்கு கப்பியிருந்த எங்கள் துணிகளை அகற்றித் துவைக்கக் கொண்டு போனார்கள். நிர்வாணமாக நின்ற எங்களை நீச்சல் குளம் ஒன்றில் குளிக்க வைத்தார்கள். குளத்தின் விளிம்புகளில் ஜப்பானியப் பெண்கள் கையில் கழிகளோடும், துடைப்பங்களோடும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கையால் நாங்கள் அடிபட்டோம்.

ஜப்பானிய விதிகளுக்கேற்ப நாங்கள் ‘சுத்த'மானதும் ஃபகுவோகா என்ற பகுதிக்குக் கொண்டு போகப்பட்டோம். நிறையப் பேர் தலையில் தொப்பியுடனும், விளக்கோடும் காணப்பட்டனர். அவர்களெல்லாம் சுரங்கத் தொழிலாளர்கள் என்பது புரிந்தது. விரைவில் நாங்களும் அவர்களோடு சேர்ந்து பூமிக்கடியில் முன்னூறு அடி ஆழத்தில் பணிபுரிந்தோம்.

கடைசியாக ஒருநாள் அமெரிக்கர்கள் எங்களை விடுதலை செய்தார்கள். வழியில் நான் அணுகுண்டு விழுந்த நாகஸாகியைப் பார்த்தேன்.

எனக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான அனுபவங்கள் உங்களில் யாருக்கும் நேர்ந்திருக்காது. நேரவும் கூடாது.”

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/29&oldid=1075198" இலிருந்து மீள்விக்கப்பட்டது