பக்கம்:தாய்லாந்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதற்குச் சான்றாக இப்போதும் ஸயாம் தேசத்தில் ஆண்டு தோறும் அதே மார்கழி மாதத்தில் ஒரு பெரிய உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தில் பெருமாளுக்குரிய டோலோற்சவத்தை (ஊஞ்சலில் வைத்து ஆட்டுவது) சிவபெருமான் வேடத்தைப் போட்டுக் கொள்கிற ஒருத்தனுக்குச் செய்கிறார்கள். ‘சரி... அவர்களுக்குப் ‘பாவை’ நூல்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?’ என்று கேட்டால் அடியோடு ஒன்றுமே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் இந்த உற்சவம் மார்கழி மாதத்தில் நடக்கிறது என்பதற்காக மட்டும் அதைப் பாவைகளோடு சேர்த்துப் பேசுவதற்கு ஆதாரமில்லை என்று தோன்றலாம். பின் நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், அவர்கள் இந்த உற்சவத்துக்குப் பெயரே ‘ட்ரியம்பாவை, ட்ரிபாவை’ என்கிறார்கள். இப்போது பைபிள் படிப்பவர்களுக்கு உபநிடத சமாசாரமே தெரியாவிட்டாலும், அதிலிருந்து வந்த கதை மாத்திரம் அவர்களிடம் இருப்பது போலத்தான். தாய்லாந்துக்காரர்களுக்கு இப்போது திருப்பாவை, திருவெம்பாவை. பாராயணம் அடியோடு விட்டுப் போய்விட்டது என்றாலும், அவர்கள் இதே மார்கழி மாதத்தில் சிவவேடம் போட்டுக் கொண்டவனுக்காக நடத்துகிற டோலோற்சவத்துக்கு ‘ட்ரிம்பாவை', ‘ட்ரிபாவை’ என்ற பெயர் மட்டும் இருக்கிறது.”

“உண்மைதான்; இங்கே சமீபத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை பாராயணம் செய்கிறார்கள். பிராம்மணர்கள்தான் செய்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டிலிருந்து வந்தவர்களாயிருக்கலாமோ என்று தோன்றுகிறது. குடுமிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேட்டியைக் கீழ்ப் பாய்ச்சியாகக் கட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் போய்ப்பார்க்கலாம்” என்றார் மறைக்காடன்.

“மிகப் பெரிய தமிழறிஞரின் பேரன் நீங்கள். மறைமலையடிகளாரின் குணங்கள், பழக்க வழக்கங்களில் ஏதேனும் உங்களிடம் படிந்திருக்கிறதா?’ என்று கேட்டேன்.

“அவரது பேரன் என்பது எனக்குத் தனிப் பெருமையே! ஆனால், அவரது பழக்க வழக்கங்களை என்னால் கடைப்பிடிப்பது முடியாத காரியம். அவர் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு எழுந்து பாதம் பருப்பும், சேமியாவும் சாப்பிடுவார். மூன்று மணிவரை விழித்திருந்து படிப்பார். எழுதுவார். பின்னர்

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/81&oldid=1075271" இலிருந்து மீள்விக்கப்பட்டது