பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மக்சீம் கார்க்கி


“தைரியமாகப் பேசுகிறான், இல்லை?” என்று ஒரு நெட்டையான ஒற்றைக் கண்ணனான தொழிலாளி தாயை இடித்துக்கொண்டே சொன்னான்.

“தோழர்களே! நமக்கு உதவி செய்வதற்கு, நம்மைத் தவிர யாருமே கிடையாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒவ்வொருவரின் நன்மைக்காக நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும். எல்லாருடைய நன்மைக்காகவும் ஒவ்வொருவரும் ஒன்றாக வேண்டும். நமது எதிரிகளை ஒழிப்பதற்கு இதுவே நமது தாரக மந்திரம்!”

“ஏ பையன்களா! இவன் உண்மையைத்தான் பேசுகிறான்!” என்று தன் முஷ்டியை மேலே உயர்த்திக் காட்டிக்கொண்டே பேசினான் மாகோதின்.

“மானேஜரைக் கூப்பிடுங்கள்!” என்று கத்தினான் பாவெல்.

கூட்டத்தினர் மத்தியில் திடீரென ஒரு சூறாவளிக் காற்று சுழித்து வீசிய மாதிரி தோன்றியது. அந்தக் கூட்டமே அசைந்து கொடுத்தது ஒரே சமயத்தில் எண்ணற்ற குரல்கள் உரக்கக் கத்தின:

“மானேஜரைக் கூப்பிடு!”

“அவருக்கு ஆள் அனுப்புங்கள்!”

தாய் மேலும் முன்னேறி வந்தாள். பெருமிதமும் பெருமையும் பிரதிபலிக்கும் முகத்தோடு தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பாவெல் அந்த மதிப்பும் வயதும் நிறைந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தான். அது மட்டுமா? ஒவ்வொருவரும் அவன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்டார்கள். அவன் சொன்னவை அனைத்தையும் ஒப்புக்கொண்டார்கள், அவன் கோபாவேசமடைந்து, மற்றவர்களைப்போல் வசைமாரி பொழியாதிருந்தது பற்றி அவளுக்குப் பிடித்தது.

தகரக் கொட்டகையிலே கல் மழை பொழிந்த மாதிரி கேள்விகளும் வசைமாரிகளும், குத்தலான வார்த்தைகளும் இரைந்து ஒலித்தன. பாவெல் ஜனக்கூட்டத்தைக் குனிந்து நோக்கினான். தனது அகன்று விரிந்த கண்களால் அந்தக் கூட்டத்திடையே எதையோ துழாவிக் காண்பதுபோலக் கூர்ந்து பார்த்தான்.

“தூது செல்வது யார்?”

“சிஸோவ்!”

“விலாசவ்!”