பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

91


“ரீபின்தான் சரி! அவன் துடியாகப் பேசுவான்!”

திடீரென அமுங்கிப்போன குரல்கள் கூட்டத்தினரிடையே கலகலத்தன.

“அவரே வந்துவிட்டார்!”

“அதோ மானேஜர்!”

கூரிய தாடியும் நீண்ட முகமும்கொண்ட ஒரு நெட்டை மனிதன் வருவதற்கு வழிவிட்டு ஜனக்கூட்டம் இடம்கொடுத்து விலகியது.

“வழியை விடுங்கள்!” என்று சொல்லிக்கொண்டே, தொழிலாளர்களைத் தொட்டு விடாதபடி, மெதுவாக வழிவிடும்படி கையாட்டிக்கொண்டே வந்தான் அவன், அவனது கண்கள் குறுகிச் சுழித்திருந்தன. மனிதர்களை அடக்கியாளும் அதிகாரியின் பழகிப்போன பார்வையோடு அவன் தொழிலாளர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே முன்னேறினான். தொழிலாளர்கள் தங்கள் தொப்பிகளை எடுத்துவிட்டு, அவனுக்கு மரியாதையாக வணங்கினர். ஆனால் அவனோ தான் பெற்ற மரியாதைக்குப் பிரதி வணக்கமே செய்யாமல், முன்னே சென்றான், மக்கள் அனைவரும் வாயடைத்துப்போய் நின்றார்கள். கலக்கம் நிறைந்த புன்னகையும், அமைதியான வியப்பும் அவர்களிடையே பரவியது. குற்றம் செய்துகொண்டிருக்கும்போது பெற்றோரிடம் அகப்பட்டுக்கொண்ட குழந்தைகளைப்போல் திருகத் திருக விழித்தார்கள்.

மானேஜர் தாயைக் கடந்து சென்றான். செல்லும்போது அவளது முகத்தைக் தனது உக்கிரம் நிறைந்த கண்களால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த இரும்புக் குவியலுக்கு எதிரே போய் நின்றான். யாரோ அவனை மேலே ஏற்றுவதற்காகக் கைகொடுத்து உதவ முன்வந்தார்கள். ஆனால் அவனோ அந்த உதவியை நிராகரித்துவிட்டு பலத்த வேகத்தோடு, தானே மேலே தாவியேறி சிஸோவுக்கும் பாவெலுக்கும் எதிரே நின்றான்.

“இதெல்லாம் என்ன கூட்டம்? நீங்கள் ஏன் வேலைக்குப் போகவில்லை?”

சில கணநேரம் ஒரே அமைதி நிலவியது. தானியக் கதிர்களைப் போல் மனிதர்களின் தலைகள் ஆடியசைந்தன. சிஸோவ் தன் தொப்பியை எடுத்து வீசினான், தோள்களைச் சிலுப்பினான், தலையைத் தொங்கவிட்டான்.

“என் கேள்விக்குப் பதில் சொல்!” என்று கர்ஜித்தான் மானேஜர்.