பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

129



“பாவெல் ஒரு அபூர்வப் பிறவி” ஹஹோலின் குரல் மிருதுவாயிருந்தது. “அவன் ஒரு இரும்பு மனிதன்”.

“ஆனால். இப்போது அவன் சிறையில் இருக்கிறான்” என்று மீண்டும் சிந்தனையிழந்தவாறே பேசினாள் தாய்; அதை நினைத்தாலே பயங்கரமாயிருக்கிறது; ஆனால் முன்பிருந்தது போல் அவ்வளவு பயமில்லை. என் வாழ்க்கையும் மாறிவிட்டது; என் பயங்களும் மாறிவிட்டன. இன்றோ நான் ஒவ்வொருவருக்காகவும் பயந்து கொண்டிருக்கிறேன். இப்போது என் இதயமே புதிது. ஏனெனில் என் ஆத்மா இதயத்தின் கண்களைத் திறந்து விட்டுவிட்டது. அந்தக் கண்கள் அகலத் திறந்து பார்க்கின்றன, சோகம் கொள்கின்றன. அதே வேளையில் மகிழ்வும் கொள்கின்றன. எனக்குப் புரியாத விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. நீங்கள் கடவுளையே நம்பாமலிருப்பது எனக்குக் கசப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்காகத் துன்ப வாழ்வு வாழ்கிறீர்கள். சத்தியத்துக்காகச் சங்கடமான வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்; இப்போதுதான் உங்கள் சத்தியம், உங்கள் உண்மை எனக்குப் புரிகிறது. பணக்காரர்கள் என்று ஒரு வர்க்கம் இருக்கிறவரையில், சாதாரண மக்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை—மகிழ்ச்சியோ, நியாயமோ—எதுவுமே கிட்டப்போவதில்லை. இப்போதோ நான் உங்களைப் போன்ற இளைஞர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சில சமயங்களில் இரவு நேரத்தில் எனது கடந்த காலத்தைப் பற்றி, பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கப்பட்ட எனது இளமையின் பலத்தைப் பற்றி, கசக்கிப் பிழியப்பட்ட எனது இளம் இதயத்தைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு; அந்த நினைவினால் எனக்கே என்மீது அனுதாபம் பிறக்கிறது; கசப்புணர்ச்சி பிறக்கிறது. ஆனால் இப்போதோ எனக்கு வாழ்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுக சிறுக நான் என்னையே உணர்ந்துவரத் தொடங்குகிறேன்....

நெட்டுவிட்டு வளர்ந்து மெலிந்திருந்த ஹஹோல் எழுந்தான், சிந்தனை வசப்பட்டு, காலடியோசையே கேட்காதவண்ணம் எழுந்து உலவத் தொடங்கினான்.

“எவ்வளவு நன்றாகச் சொன்னீர்கள்!” என்று அதிசயித்தான், எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். கேர்ச் நகரில் ஒரு வாலிப யூதன் இருந்தான். அவன் ஒரு கவி. ஒரு நாள் அவன் ஒரு பாட்டு எழுதினான்.