தாய்
215
“செய்ய வேண்டியதுதான்”
“அவனோடு நான் விவாதியாமல் போனது பெருந்தவறு’ என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான். பாவெல்.
“பரவாயில்லை, இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தன் தலைமயிரைக் கோதிக் கொடுத்தான் ஹஹோல். “நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை. மேலும், நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே, அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அசைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து ஊழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் சொய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்...”
“உனக்கு எல்லாமே எளிதாக இருக்கிறது அந்திரியூஷா!” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் தாய்.
“ஆமாம். வாழ்க்கையைப் போல்!” என்றான் ஹஹோல்.
சில நிமிஷம் கழித்து அவன் பேசினான்.
“சரி. நான் வயல் வெளியில் கொஞ்சம் உலாவி வரப்போகிறேன்”
“குளித்த பிறகா? காற்று வேறு அடிக்கிறது. சளிப்பிடிக்கும்” என்று எச்சரித்தாள் தாய்.”
“கொஞ்சம் காற்றாடி வந்தால்தான் தேவலை” என்றான் அவன்.
“சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள், கொஞ்சம் பாடேன்!” என்றான் பாவெல்.
“வேண்டாம். நான் போகிறேன்.”
அவன் தனது உடைகளை மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல் வெளிக் கிளம்பினான்.
“அவன் மனம் என்னவோ சங்கடப்படுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.
“அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நீ அவன்மீது அதிகமான அன்போடு நடந்துகொள்கிறாய். அதைப்பற்றி எனக்கு மிகுந்த சந்தோஷம்” என்றான் பாவெல்.