பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப் பாட்டுக் குரல் திமிறியது, நடுங்கியது, உடைந்தது. பின் நின்றுவிட்டது. யாரோ ஒருவன் தாயின் தோளைப் பற்றிப் பிடித்துத் திரும்பிவிட்டு முதுகில் கைகொடுத்து முன்னே நெட்டித் தள்ளிக் கத்தினான்:

“போ, போய் விடு”

“தெருவைக் காலி செய்யுங்கள்!” என்று அந்த அதிகாரி கத்தினான்.

சுமார் பத்தடிக்கு முன்னால் அவள் வேறொரு கூட்டத்தைப் பார்த்தாள். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும். திட்டிக்கொண்டும், சீட்டியடித்துக்கொண்டும் தெருவை விட்டு விலகிச் சென்று, வீட்டு முற்றங்களில் மறைந்துகொண்டிருந்தார்கள்.

“விலகிப்போ -ஏ, பொட்டைப் பிசாசே!” என்று அந்த மீசைக்காரக் குட்டிச் சிப்பாய் தாயின் காதிலேயே சத்தமிட்டு அவளைத் தெருவோரமாகப் பிடித்துத் தள்ளினான்.

தாய் கொடிக்கம்பின் பலத்தின் மீது சாய்ந்தவாறே நடந்து சென்றாள். ஏனெனில் அவளது பலமெல்லாம் காலைவிட்டு ஒடிப்போய்விட்டது. மற்றொரு கையால் அவள் சுவர்களையும். வேலிகளையும் பிடித்துக்கொண்டு கீழே விழுந்து விடாதபடி நடந்தாள். அவளுக்கு முன்னால் நின்ற ஜனங்கள் அவள் மீது சாடிச் சாய்ந்தார்கள். அவளுக்குப் பின்னாலும், பக்கத்திலும் சிப்பாய்கள் நடந்து வந்தார்கள்.

“போங்க, சீக்கிரம் போங்கள்!”

அவள் அந்தச் சிப்பாய்கள் தன்னைக் கடந்து போக விட்டுவிட்டு நின்றாள், சுற்றுமுற்றும் பார்த்தாள். தெருக்கோடியில் மைதானத்துக்குச் செல்லும் வழியை மறித்துச் சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மைதானமோ காலியாய் இருந்தது. சாம்பல் நிற உருவங்கள் அந்த ஜனங்களை நோக்கி மெதுமெதுவாக முன்னேறி வரத்தொடங்கின. அவள் திரும்பிப் போய்விட எண்ணினாள். ஆனால் தன்னையுமறியாமல் அவள் முன்னாலேயே போக நேர்ந்தது. கடைசியில் அவள் அப்படியே நடந்து நடந்து ஒரு வெறிச்சோடிப்போன குறுகிய சந்துப்பக்கமாக வந்து சேர்ந்தாள், அதனுள் நுழைந்தாள்.

மீண்டும் அவள் நின்றாள். ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே காது கொடுத்துக் கேட்டாள். எங்கிருந்தோ கூட்டத்தின் இரைச்சல் கேட்டது.

அந்தக் கம்பின் மீது சாய்ந்தவாறே, அவள் மீண்டும் நடந்தாள். அவளது உடம்பெல்லாம் வியர்த்துப் பொழிந்தது: அவளது புருவங்கள்