பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

251


“கிழவனான நான் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். ஐம்பத்தி மூன்று வருஷ காலமாக நான் இந்தப் பூமியில் வாழ்கிறேன், முப்பத்தொன்பது வருஷமாக இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன், இன்றோ அவர்கள் என் மருமகனை மீண்டும் கைது செய்தார்கள். அவன் ஒரு நல்ல பையன், புத்திசாலி. அவனும் பாவெலுக்குப் பக்கமாக, கொடிக்குப் பக்கமாக முன்னேறிச் சென்றான்...”

அவன் கையை உதறினான். பின் குறுகிப் போய் தாயின் கரத்தைப் பற்றிப் பிடித்தவாறு பேசினான்:

“இந்தப் பெண் பிள்ளை சொன்னதுதான் உண்மை. நமது குழந்தைகள் மானத்துடன் வாழ விரும்புகிறார்கள்; அறிவோடு வாழ விரும்புகிறார்கள். ஆனால் நாம்தான் அவர்களை நிராதரவாய் நிர்க்கதியாய் விட்டுவிட்டோம்! சரி வீட்டுக்குப் போ, பெலகேயா நீலவ்னா.”

“நல்லவர்களே!” என்று அழுது சிவந்த கண்களால் சுற்றிப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்; “நமது குழந்தைகளுக்கு வாழ்வு உண்டு; இந்த உலகம் அவர்களுக்கே?”

“புறப்படு, பெலகேயா நீலவ்னா. இதோ, உன் கம்பு” என்று கூறிக்கொண்டே, முறிந்துபோன அந்தக் கொடிக்கம்:மை எடுத்து அவள் கையில் கொடுத்தான் சிஸோவ்.

அவர்கள் அவளை மரியாதையுடனும் துக்கத்துடனும் கவனித்தார்கள்; அனுதாபக் குரல்களில் கசமுசப்பின் மத்தியிலே அவள் அங்கிருந்து அகன்று சென்றாள். சிஸோல் அவளுக்காக, கூட்டத்தினரை விலகச் செய்து வழியுண்டாக்கினான், ஜனங்கள் ஒன்றுமே பேசாது வழிவிட்டு ஒதுங்கினர். ஏதோ ஒரு இனந்தெரியாத சக்தியினால் அவர்கள் இழுக்கப்பட்டு, அவள் பின்னாலேயே சென்றார்கள்; செல்லும்போது தணிந்த குரலில் ஏதேதோ வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அவளது வீட்டு வாசலை அடைந்ததும் அவள் அவர்கள் பக்கமாகத் திரும்பினாள்; தன் கைத்தடியின் மீது சாய்ந்தவாறே தலை வணங்கினாள், நன்றியுணர்வு தொனிக்கும் மெதுவான குரலில் சொன்னாள்:

“உங்கள் அனைவருக்கும் நன்றி!”