பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

279


நடந்தாள். போகும் போதே குழந்தையைச் செல்லமாகச் கொஞ்சி அதன் அழுகையை நிறுத்த முயன்றாள்.

“அடடா, கண்ணு ! அட்டா....”

பொழுது விடிய ஆரம்பித்ததும் அவள் நாணிக் கூசினாள். தன்னை அந்த அரை நிர்வாணக் கோலத்தில் யாரேனும் தெருவில் பார்த்துவிடக் கூடாதே என அஞ்சினாள். எனவே அவள் ஊர்ப்புறத்திலுள்ள சதுப்புப் பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்த அஸ் பென் மரத்தடியில் உட்கார்ந்தாள். அங்கேயே வெகுநேரம் உட்கார்ந்து, அகன்று விரிந்த கண்களோடு இருளையே வெறித்துப் பார்த்தாள். தூங்கி வழிந்து கொண்டிருக்கும் குழந்தையை உறங்கப் பண்ணுவதற்காகவும் தனது இதய வேதனையைச் சாந்தப்படுத்துவதற்காகவும் அவள் ஒரு தாலாட்டுப் பாட்டை முணுமுணுத்தாள்.

“அடடா, கண்ணு ! அடடா...”

அவள் அங்கிருந்தபோது, ஒரு கரிய பறவை அரவமின்றி அவள் பக்கமாகப் பறந்து சென்றது. அந்தப் பறவையின் சிறகு வீச்சு அவளைச் சோக அமைதியினின்றும் திடுக்கிட்டு எழுந்திருக்கச் செய்தது. குளிரால் நடுநடுங்கிக்கொண்டே வீட்டை நோக்கி, மீண்டும் அந்த வழக்கமான கொடுமையையும் உதைகளையும், ஏச்சுப் பேச்சுக்களையும் நோக்கித் திரும்பி நடந்தாள்......

கடைசி ஸ்வர ஸ்தாயி ஆழ்ந்து முனகியது. உள்ளடங்கி விறைத்துப்போன ஒரு பெருமூச்சுடன் அந்தக் கீதம் மடிந்து மறைந்து போயிற்று.

சோபியா தன் சகோதரனிடம் திரும்பினாள்.

“உனக்கு இது பிடித்திருந்ததா?” என்று அமைதியாகக் கேட்டாள்.

“ரொம்ப ரொம்ப!” என்று ஏதோ தூக்கத்திலிருந்து விழிப்புற்றவன் மாதிரி சொன்னான் அவன்; “மிகவும்......”

தனது நினைவின் எதிரொலி தாயின் உள்ளத்துக்குள்ளே நடுங்கிப் பாடியது; அதே சமயம் அவள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் வேறொரு எண்ணமும் எழுந்தது.

“பாரேன்–அமைதியாகவும், நட்புரிமையோடும் ஒன்றாக வாழ்கிற ஜனங்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதில்லை; குடிப்பதில்லை. அந்த இருண்ட வாழ்விலே உள்ள மனிதர்களைப் போல் இவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதில்லை.....”