பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

மக்சீம் கார்க்கி


நிரந்தரமாக நிலைத்திருந்த சித்திரவதை. அந்த மாதிரியான சித்திரவதையை தாங்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எங்கிருந்துதான் சக்தி பெறுகிறார்களோ?”

“எங்களுக்கு எல்லாம் பழகிப்போய்விடுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் பெலகேயா.

“நான் வாழ்க்கையை நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது” என்று சிந்தனை வயப்பட்டவனாகக் கூறினான் நிகலாய்: “என்றாலும் வாழ்க்கையைப் பற்றிப் புத்தகத்தின் மூலமாவது என்னுடைய பக்குவமடையாத அரைகுறை அபிப்பிராயங்கள் மூலமாவது தெரிந்துகொள்ளாமல், இந்த மாதிரி நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, வாழ்க்கை பயங்கரமாய்த் தோற்றமளிக்கிறது. சின்னஞ் சிறு விஷயங்கள்தான் பயங்கரமாய்த் தோன்றுகின்றன. அந்தக் கவனிப்பற்ற சிறுசிறு பொழுதுகள்தான் ஆண்டுகளை உருவாக்குகின்றன.......”

அந்தப் பேச்சு இடைவிடாது விரிந்து பெருகியது. இருண்ட வாழ்க்கையின் சகல அம்சங்களையும் அந்தப் பேச்சு தொட்டுவிரிந்தது. தாய் தனது நினைவின் ஆழத்திலேயே முங்கி, முழுகிவிட்டாள்; தனது இளமைக் காலத்தில் பயங்கரத்தை உண்டாக்கிய அன்றாடத் துயரங்களையும், ஆறாத மனப் புண்களையும் அவள் சங்கிலித் தொடர்போல நினைவுக்குக்கொண்டு வந்து சிந்தித்துப் பார்த்தாள். கடைசியாக அவள் பேசினாள்:

“நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரமாகிவிட்டது. நான் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருக்கிறேனே. சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி முடித்துவிட என்னால் முடியுமா? முடியாது.”

அக்காவும் தம்பியும் அவளிடமிருந்து மெளனமாகவே விடை பெற்றுச் சென்றனர். வழக்கத்துக்கு மாறாக, நிகலாய் தன் தலையை அதிகம் தாழ்த்தி வணங்கியது போலவும், தன்கரத்தை அதிக அன்போடு குலுக்கியது போலவும் தாய்க்குத் தோன்றியது. சோபியா தாயை அவளது அறை வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு, திரும்ப முனையும்போது வாசல் நடையில் நின்றவாறே சொன்னாள். “நிம்மதியாகத் தூங்குங்கள். நல்லிரவு!”

அவளது குரலில் பரிபூரணமான பரிவு தொனித்தது; அவளது சாம்பல் நிறக் கண்கள் ஆர்வங் கலந்த அன்போடு தாயின் முகத்தைக் கனிந்து நோக்கின.