பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மக்சீம் கார்க்கி


ஆனால் அவள் திரும்பி வருவதற்குள்ளாக அவன் நன்றாகத் தூங்கிப் போய்விட்டாள். அவள் அவனையே ஒரு நிமிஷம் குனிந்து பார்த்தார்: அவளது கையிலிருந்த குவளை நடுங்கியது: அதனால் தண்ணீரில் கிடந்த ஐஸ் துண்டுகள் குவளையோடு மோதி ஓசையுண்டாக்கின. பிறகு அவள் குவளையை மேஜை மீது வைத்து விட்டு, சுவரில் இருந்த தெய்வ விக்ரங்களை நோக்கி முழங்காலிட்டு அமைதியாகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டாள். ஜன்னலுக்கு வெளியே குடிகாரர்களின் கும்மாளம் ஒலித்து மோதிக்கொண்டிருந்தது. இலையுதிர்கால இரவின் இருளையும் குளிரையும் பிளந்துகொண்டு ஒரு ஆர்மோனியம் எங்கோ ஏங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. யாரோ உரத்த முரட்டுக் குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். யாரோ வாய்க்கு வந்தபடி. சரமாரியாக ஆபாசமாக வைது தீர்த்தார்கள். எரிச்சலும் களைப்பும் நிறைந்த பெண் பிள்ளைகளின் உரத்த குரல்கள் இடையிடையே ஒலித்துக்கொண்டிருந்தன....

விலாசவின் அந்தச் சின்னக் குடிலில் வாழ்க்கை அமைதியாக, முன்னைவிட ஒழுக்கமாக ஒடிக்கொண்டிருந்தது. மற்ற வீடுகளிலுள்ள வாழ்க்கைக்கு மாறுபட்டிருந்தது. அவர்களது வீடு, குடியிருப்பின் ஒரு மூலையில், ஒரு சரிவு நிலத்துக்கு மேலாக இருந்தது; என்றாலும் சேற்றுக் குட்டையிலிருந்து மிகவும் உயர்ந்திருக்கவில்லை. வீட்டின் மூன்றிலொரு பாகத்தை சமையலறை ஆக்கிரமித்திருந்தது. சமையலறையைப் பிரிந்து நிற்கும் ஒரு சின்ன அறையில் தாய் படுத்துத் தூங்குவாள். மீதியுள்ள இரண்டு பாகத்தில் ஒரு சதுரமான அறை இருந்தது. அதில் இரு ஜன்னல்களும் இருந்தன. ஒரு மூலையில் பாவெலின் படுக்கையும், இன்னொரு மூலையில் ஒரு மேஜையும், இரண்டு பெஞ்சுகளும் கிடந்தன. மீதியுள்ள இடத்தில் சில நாற்காலிகளும், ஒரு அலமாரியும் அதன்மீது ஒரு கண்ணாடியும் இருந்தன. அவர்களது துணிமணிகளை வைத்திருந்த ஒரு டிரங்குப் பெட்டி. சுவரில் தொங்கும் ஒரு கடியாரம், மூலையிலுள்ள இரண்டு விக்ரகங்கள்—இவையே இதர சாமான்கள்.

மற்ற இளைஞர்களைப் போலவே தானும் வாழ விரும்பினான் பாவெல். தனக்கென ஒரு ஆர்மோனியப் பெட்டி, கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டை, பளபளப்பான ஒரு கழுத்து ‘டை’. ரப்பர் ஜோடுகள், ஒரு பிரம்பு முதலியவற்றை வாங்கி வைத்து, இளவட்டப் பிள்ளையின் ஆசைகளைப் பூர்த்தி செய்திருந்தான். மாலை வேளைகளில் அவன் மது விருந்துக்குச் செல்வான்; அங்கு நடனம் ஆடப் பழகிக்கொண்டான். ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றாக குடித்துவிட்டு