பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

மக்சீம் கார்க்கி


வெளியைப் பார்த்தாள். அங்கு யாரையும் காணோம்; மௌனமே நிலலியது. அவளுக்குத் தைரியம் வந்தது.

“சரி, இப்படி வா. முகத்தில் ஒரு கட்டுப்போடுகிறேன்” என்று சொன்னாள் தாய்.

“அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்—இதைக் கண்டு நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்றான் அவன். “இது ஒரு சரியான நேர்மையான சண்டை அவன் என்னை அடித்தான்; பதிலுக்கு நானும் அவனை அடித்துவிட்டேன்!”

ஆனால் தாய் விறுவிறென்று அவனது முகத்திலிருந்த காயத்துக்குக் கட்டுப்போட்டாள். ரத்தத்தைக் கண்ணால் கண்டதும் அவள் மனத்தில் ஓர் அனுதாப உனர்ச்சி ஏற்பட்டது. அவளது கைவிரல்கள் வெதுவெதுப்பான அந்தச் செங்குருதியின் பிசுபிசுப்பை உணர்ந்தபோது, அவளது உடம்பெல்லாம் ஒரு குளிர்நடுக்கம் பரவிச் சிலிர்த்தோடியது. அவசர அவசரமாக, வாயே பேசாமல் அவள் அந்தச் சிறுவனை வயல் வெளியின் குறுக்காக இழுத்துக்கொண்டு ஓடினாள்.

“தோழரே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று தன் வாயின் மீது போட்டிருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டான். அவன். “உங்கள் உதவியில்லாமலே, நான் போய்விடுவேனே.”

ஆனால் அவனது கரங்கள் நடுநடுங்குவதையும், கால்கள் பலமிழந்து தடுமாறுவதையும் அவள் கண்டாள். பலமற்ற மெல்லிய குரலில் அவன் பேசிக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விரைவாக வந்தான்; தான் கேட்கும் கேள்விகளின் பதிலுக்காகக்கூட அவன் காத்திராமல் பேசினான்:

“நீங்கள் யார்? நான் ஒரு தகரத் தொழிலாளி. என் பேர் இவான். இகோர் இவானவிச்சின் கல்விக்குழாத்தில் நாங்கள் மூன்றுபேர் இருந்தோம். மூன்று பேரும் தகரத் தொழிலாளிகள்; ஆனால் நாங்கள் மொத்தத்தில் பதினோருபேர். எங்களுக்கு அவர்மீது ஒரே பிரியம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் - எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட.....”

ஒரு தெருவுக்கு வந்ததும் தாய் ஒரு வண்டியை வாட்கைக்கு அமர்த்தினாள். இவானை அதில் ஏற்றி உட்காரவைத்தவுடன் அவள்: “இனிமேல் ஒன்றும் பேசாதே” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கைக்குட்டையால் அவனது வாயில் ஒரு கட்டுப்போட்டாள்.