பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

375


“எனக்கும்தான் தெரியாது” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

“அப்படியானால், இங்கு வருவதிலேயே அர்த்தமில்லை” என்று எரிச்சலோடு சொன்னான் அதிகாரி, “எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியாவிட்டால், இங்கு ஏன் வருகிறீர்கள்? வந்து எங்கள் பிராணனை ஏன் வாங்குகிறீர்கள்?.....”

‘விசாரணை சீக்கிரம் நடக்குமா? என்று கேட்டாள் தாய்.

“பிராசிக்யூட்டர் சில நாட்களுக்கு முன் வந்திருந்தார். சீக்கிரமே நடக்குமென்று சொன்னார்.....”

அவர்கள் இருவரும் அர்த்தமற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள், அன்பும் பரிவும் நிறைந்த கண்களோடு பாவெல் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவன் முன்னிருந்ததைப்போல இப்போதும் மிகுந்த அமைதியும் நிதானமும் நிறைந்து விளங்குவதாக அவளுக்குத் தோன்றியது. அவனது தோற்றத்தில் அப்படியொன்றும் மாற்றமில்லை. கைகள் வெளுத்திருந்தன; தாடி வளர்ந்திருந்ததால், வயதில் அதிகமானவனாகத் தோன்றினான். அவ்வளவுதான். அவள் அவனிடம் இன்பகரமான விஷயம் எதையாவது சொல்ல விரும்பினாள். நிகலாயைப் பற்றித்தெரிவிக்க விரும்பினாள். எனவே சுவையற்ற தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த தொனியிலேயே அவள் பேசத் தொடங்கினாள்:

“உன்னுடைய ஸ்வீகார புத்திரனை அன்றைக்கு நான் பார்த்தேன்......”

பாவெல் விஷயம் புரியாமல் அவளது கண்களையே பார்த்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோவின் முகத்திலுள்ள அம்மைத் தழும்புகளை அடையாளம் சொல்வதற்காக, அவள் தன் கை விரல்களால் தன் கன்னத்தில் தட்டிக்கொட்டிக் காட்டினாள்.

“அவன் இப்போது சரியாயிருக்கிறான். அவனுக்குச் சீக்கிரமே ஒரு வேலை பார்த்துவைக்க வேண்டும்.”

பாவெல் புரிந்துகொண்டான். தலையை ஆட்டியபடி மகிழ்ச்சி நிறைந்த கண்களோடு பதிலிறுத்தான்.

“அப்படியா? ரொம்ப நல்லது” என்றான் அவன்.

“ஆமாம், இவ்வளவுதான் விஷயம்” என்று முடித்தாள் அவள். அவனது மகிழ்ச்சி அவளது இதயத்தைத் தொட்டது; அதன் காரணமாகத் தன்மீது திருப்திகொண்டாள்.

அவளது கரத்தை இறுகப்பற்றி அவளுக்கு விடைகொடுத்தான்.