பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

377


அவள் சமையலறைக்குள் சென்றாள். சாஷாவும் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.

“நானும் உதவட்டுமா?”

“வேண்டாம், வேண்டாம்.”

தாய் அடுப்பின் பக்கமாகக் குனிந்து ஒரு பாத்திரத்தை எடுத்தாள்.

“பொறுங்கள்.....” என்று அமைதியாகச் சொன்னார் அந்தப் பெண்.

அவளது முகம் வெளுத்து, கண்கள் வேதனையுடன் விரிந்தன. அதே சமயம் அவள் நடுங்கும் உதடுகளோடு அவசர அவசரமாக முணுமுணுத்துப் பேசினாள்:

“நான் உங்களிடம் ஒன்று கேட்க நினைத்தேன். அவன் சம்மதிக்கமாட்டான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும். நீங்கள் அவனிடம் அது விஷயமாய் மன்றாடிக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவனது தேவை இப்போது இங்கு மிகவும் அத்தியாவசியமானது. எடுத்துக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக, அவன் இதற்குச் சம்மதிக்கத்தான் வேண்டும் என்று சொல்லுங்கள். அவனது உடல் நலத்தைப்பற்றி நான் மிகவும் பயந்துகொண்டிருப்பதாகச் சொல்லுங்கள். உங்களுக்கே தெரியும்—இன்னும் விசாரணைக்குரிய நாளைக்கூட நிர்ணயிக்கவில்லையே.....”

அவள் மிகுந்த சிரமத்தோடு பேசுகிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவள் ஏதோ ஒரு மூலையைப் பார்த்தவாறே நிமிர்ந்து நின்றாள். குரல் மட்டும் தடுமாறியது. சோர்ந்துபோய் தன் கண்ணிமைகளை மூடி, உதடுகளைக் கடித்துக்கொண்டாள். இறுகப் பிடித்து மடக்கிய அவளது கைவிரல்கள் சொடுக்குவிட்டுக் கொள்வதுகூடத் தாய்க்குக் கேட்டது.

இந்த மாதிரியான கொந்தளிப்பைக் கண்டு, பெலகேயா மனம் புரிந்துகொண்டு அவளைத் துக்கத்தோடு தழுவியணைத்துக் கொண்டாள்.

“அடி. என் கண்ணே!” என்று அவள் மிருதுவாகச் சொன்னாள். “அவன் தன்னைத் தவிர வேறு யார் பேச்சையுமே கேட்க மாட்டான்—-எவர் பேச்சையும் கேட்க மாட்டான்!”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறே மௌனமாக நின்றார்கள், பிறகு சாஷா தாயின் கரங்களைத் தன் தோள் மீதிருந்து மெதுவாக விலக்கிவிட்டு, நடுக்கத்துடன் சொன்னாள்: