பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

மக்சீம் கார்க்கி


“ஆமாம், நீங்கள் சொல்வது சரி. இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம், என்னவோ உணர்ச்சியில்.......”

திடீரென அவள் அமைதி பெற்று சாவதானமாகச் சொன்னாள்: “ரொம்ப சரி, வாருங்கள். நோயாளிக்கு உணவு கொடுக்கலாம்.”

அவள் இவானின் படுக்கையருகே சென்று அமர்ந்தபோது, அவனை நோக்கித் தலையை வலிக்கிறதா என்பதைப் பரிவோடு கேட்டுக்கொண்டாள்.

“அதிகம் இல்லை. எல்லாமே கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. பலவீனமாய் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே அவளது முன்னிலையில் ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தால் இன்னது செய்வதென்று தெரியாமல் போர்வையை மோவாய்க்குக் கீழாக இழுத்துவிட்டுக்கொண்டான் இவான். அமிதமான ஒளியைக் கண்டு கூசுவது மாதிரி கண்களைச் சுருக்கிக்கொண்டான். அவளது முன்னிலையில் சாப்பிடுவதற்கே அவனுக்கு வெட்கமாயிருக்கிறது என்பதை சாஷா உணர்ந்து கொண்டாள். எனவே அவள் எழுந்து வெளியே சென்றாள். இவான் எழுந்து உட்கார்ந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“அ... ழ.... கி தான்” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

களிப்பு நிறைந்த நீலக்கண்களும் நெருக்கமாக வளர்ந்திருந்த சிறு பற்களும் ஆண்மை குடிபுகாத பாலியக் குரலும் பெற்றிருந்தான் அவன்.

“உனக்கு என்ன வயதாகிறது?” என்று ஏதோ நினைத்தவாறே கேட்டாள் தாய்.

“பதினேழு..”

“உன் பெற்றோர்கள் எங்கே?”

“கிராமத்தில், பத்து வயதிலிருந்து நான் இங்குதான் இருக்கிறேன், பள்ளிக்கூடப் படிப்பை முடித்தவுடனேயே நான் நகருக்கு ஓடிவந்துவிட்டேன். உங்கள் பேரென்ன. தோழரே!”

இந்த வார்த்தையைச் சொல்லி அவளை அழைக்கும்போது அந்த வார்த்தை எப்போதும் அவள் உள்ளத்தைத் தொடும். அவள் குழப்பமடைவாள்.

“நீ ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” என்று புன்னகையோடு கேட்டாள் அவள்.

சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கிவிட்டு, அவன் விளக்கினான்:

“கேளுங்கள், எங்களோடு கல்விக் குழாத்தில் பங்கெடுத்து வந்த ஒரு மாணவன்—அதாவது எங்களுக்கு வகுப்பு நடத்திய ஒரு மாணவன்