பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

379


பாவெல் விலாசவின் தாயைப்பற்றி எங்களுக்கு எடுத்துக் கூறினான். மே தினக் கொண்டாட்டம் ஞாபகமிருக்கிறதா?”

தாய் தலையை அசைத்துக்கொண்டே தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.

அவன் தான் முதன் முதல் நமது கட்சியின் கொடியைப் பகிரங்கமாக ஏந்திப் பிடித்தவன்” என்று அந்தப் பையன் பெருமையோடு கூறினான். அந்தப் பெருமையுணர்ச்சி தாயின் உள்ளத்திலும் எதிரொலி எழுப்பியது.

“நான் அப்போது இல்லை. அந்த மாதிரி நாங்களும் தனியாகக் கொண்டாட விரும்பினோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. நாங்கள் கொஞ்சம், பேர்தான் இருந்தோம். இருந்தாலும், வருகிற வருஷத்தில் நாங்கள் கட்டாயம் நடத்தித்தான் பார்க்கப் போகிறோம். பாருங்களேன்!”

எதிர்காலச் சம்பவங்களைக் கற்பனை செய்து பார்க்கும் உத்வேகத்தால் அவனுக்கு மூச்சுக்கூடத் திணறியது.

“சரி, நான் விலாசவின் தாயைப் பற்றித்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கையிலிருந்த கரண்டியை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான் அவன்.” அவளும் அதன் பின்னர் கட்சியில் சேர்ந்துவிட்டாள். அது ஒரு பெரிய அதிசயம் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.”

தாய் வாய் திறந்து புன்னகை புரிந்தாள்; அந்தப் பையனுடைய புகழுரையைக் கேட்பதில் அவளுக்கு ஆனந்தம் தோன்றியது. ஆனந்தத்துடன் கூச்சக் கலக்கமும் இருந்தது.

“நான்தான் விலாசவின் தாய்!” என்று அவள் அவனிடம் சொல்ல விரும்பினாள். என்றாலும் அந்த வார்த்தைகளை உள்ளடக்கிக்கொண்டு தனக்குத்தானே ஏளன பாவத்தோடு கூறிக்கொண்டாள்;

“நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”

திடீரென்று அவள் அவன் பக்கமாகக் குனிந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள்;

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு. நீ சீக்கிரமே குணமாகி எழுந்து நடமாட வேண்டும். நாம் எடுத்துக்கொண்ட கொள்கைப் போருக்காக!

தெருக்கதவு திறந்தது. தெருவிலிருந்து குளிர்ந்த ஈரம் படிந்த இலையுதிர்காலக் காற்று உள்ளே வீசியது. செக்கச் சிவந்த கன்னத்தோடு சிரித்துக்கொண்டே சோபியா வாசலில் நின்றுகொண்டிருப்பதை, தாய் கண்டாள்.