பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

381


'நிகோல்வஸ்கி வழியாகப் போவதென்றால் ரொம்ப தூரமாச்சே” என்றாள். தாய்; “அதிலும் எவ்வளவு தூரத்துக்குக் குதிரைகளை ஒட்டிச் செல்வதென்றால்.....”

“உண்மையைச் சொல்வதென்றால், நான் இந்தப் பயணத்தை ஆதரிக்கவேயில்லை” என்று பேசத் தொடங்கினான் நிகலாய். “அங்கு இப்போது நிலைமை சரியில்லை. பல பேரைக் கைது செய்திருக்கிறார்கள். யாரோ ஒர் உபாத்தியாயரைக்கூடக் கொண்டுபோய்விட்டதாகத் தெரிகிறது. எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதையோடிருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால்கூட நல்லதுதான்....”

“ஆனால் நாம் அவர்களுக்கு எந்தவிதத் தங்கு தடையுமின்றிப் பிரசுரங்களை அனுப்பியாக வேண்டுமே” என்று மேஜை மீது விரலால் கொட்டிக்கொண்டே சொன்னாள் சோபியா. “நீங்கள் போகப் பயப்படுகிறீர்களா, நீலவ்னா?” என்று அவள் திடீரெனக் கேட்டாள்.

அந்தச் செயல் தாயின் உள்ளத்தைச் சுட்டுவிட்டது.

“நான் என்றாவது பயந்திருக்கிறேனா? முதல் தடவை போகும் போதே நான் பயப்படவில்லையே.... இப்போது மட்டும்.... நீங்கள் இப்படித் திடீரென்று.....” அவள் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே தலையைக் குனிந்துகொண்டாள். நீ பயப்படுகிறாயா, உனக்குச் சௌகரியமிருக்குமா. உன்னால் இந்தக் காரியத்தைச் செய்ய இயலுமா என்றெல்லாம் யாராவது, அவளைக் கேட்கும்போது அவர்கள் அவளிடம் ஏதோ தயவு நாடிக் கேட்பதைப்போல அவள் உணர்ந்தாள். மேலும் அந்தக் கேள்விகளாக அவர்கள் தம்முன் ஒருவரையொருவர் நடத்துகிற மாதிரி தன்னையும் நடத்தாமல் தன்னை ஒதுக்கி வைத்த மாதிரி வித்தியாசமாக நடத்துவதுபோலத் தாய்க்குத் தோன்றியது.

“நான் பயப்படுகிறேனா என்று ஏன் கேட்கிறீர்கள்?” என்று அடைத்துப்போன குரலில் கேட்டாள் அவள். “நீங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காணோமே!”

நிகலாய் பதறிப்போய்த் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள். மீண்டும் போட்டுக்கொண்டு, தனது சகோதரியை ஆழ்ந்து நோக்கினான். அங்கு நிலவிய அமைதியைக் கண்டு தாய் குழம்பிப் போனாள். அவள் மேஜையைவிட்டு எழுந்து நின்று குற்றம் செய்துவிட்டவளைப்போல் ஏதோ சொல்ல விரும்பினாள். ஆனால் அதற்குள் சோபியா அவளது கரத்தைப் பற்றிப் பிடித்து மெதுவாகக் கூறினாள்;

“என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் நான் இப்படி நடந்துகொள்ளமாட்டேன்”