பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

மக்சிம் கார்க்கி


“நானா?” என்று கூறிக்கொண்டே ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான் இக்நாத். “அவர்கள் வருவதற்கு ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு முன்னால், அந்தக் காட்டு ஷிகாரி நமது குடிசைக்கு ஓடி வந்து ஜன்னலைத் தட்டினான். ‘ஜாக்கிரதையடா, பயல்களா! அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்’ என்று சொன்னான்.”

அவன் அமைதியாகச் சிரித்துக்கொண்டே முகத்தைக் கோட்டுத் துணியில் துடைத்துக்கொண்டான்.

“சரி, கடப்பாரையைக் கொண்டு தாக்கினாலும், மிகயீல் மாமாவைக் கொஞ்சங்கூட அசைக்க முடியாது. அவன் சொன்னான்: ‘இக்நாத்! சீக்கிரமே நகருக்கு ஒடிப் போய்விடு, அந்தப் பெரிய மனுஷியை உனக்கு ஞாபகமிருக்கிறதா?’ என்று சொல்லிக்கொண்டே. ஒரு சீட்டு எழுதினான். ‘இதோ, இதை அவளிடம் கொண்டுபோய்க் கொடு’ என்றான். எனவே நான் புதர்களின் வழியாக ஊர்ந்து ஒளிந்து வந்தேன். அவர்கள் வரும் சத்தம்கூட எனக்குக் கேட்டது. அந்தப் பிசாசுகள் நாலா திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்துப் பதுங்கி வந்தார்கள். எங்கள் தார் எண்ணெய்த் தொழிற்சாலையையே சூழ்ந்து வளைத்துக்கொண்டார்கள். நான் புதர்களுக்குள்ளேயே பதுங்கிப் பம்மிக் கிடந்தேன். அவர்கள் என்னைக் கடந்து அப்பால் சென்றார்கள். உடனே நான் எழுந்து வெளியே வந்து என்னால் ஆனமட்டும் ஓட்டம் பிடித்தேன். இரண்டு நாள் இரவிலும், ஒரு நாள் பகலிலுமாக நான் நிற்காமல் நடந்து வந்திருக்கிறேன்.”

தான் செய்த காரியத்தை எண்ணி அவனே திருப்திப்பட்டுக்கொள்வது தெளிவாகத் தெரிந்தது. அவனது கபில நிறக் கண்களில் களிப்புத் துள்ளாடியது: பெரிய சிவந்த உதடுகள் துடிதுடித்துக்கொண்டிருந்தன.

“சரி, நான் ஒரே நிமிஷத்தில் உனக்குத் தேநீர் தயார் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே தேநீர் பாத்திரத்தின் அருகே சென்றாள் தாய்.

“இதோ அந்தச் சீட்டு”

அவன் மிகுந்த சிரமத்தோடு முணுமுணுத்துக்கொண்டும் வேதனையால் முகத்தை நெரித்துக்கொண்டும் தன் காலையெடுத்து பெஞ்சின் மீது போட்டான்.

நிகலாய் வாசல் நடையில் வந்து நின்றான்.

“வணக்கம். தோழா!” என்று கண்களைச் சுருக்கி விழித்தவாறே சொன்னான் அவன். “இருங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்.”