தாய்
441
“எனக்கு விசித்திரமாயிருக்கிறது” என்று சொன்னான் இக்நாத்; அவனது புன்னகையில் அவனது சந்தேகமும் குழப்பமும் தெரிந்தன.
“எது விசித்திரம்?”
‘பொதுவாக எல்லாம்தான். ஒரு புறத்தில் சிலர் மூக்கில் ரத்தக் கோறை. காணும்படி உதைக்கிறார்கள், இன்னொரு புறத்தில் சிலர் காலைக் கழுவிச் சுத்தம் செய்யவும் வருகிறார்கள். இந்த இரண்டுக்கும் மத்தியில் வேறு யாராவது இருக்கிறார்களா?”
கதவு திறந்தது; நிகலாய் பேசினான்;
“இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள்; ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக்கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்!”
இக்நாத் அவனை மரியாதையோடு பார்த்தான்.
“உண்மையைத் தொட்டுவிட்ட மாதிரி இருக்கிறது” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் அவன்.
அந்த வாலிபன் எழுந்து. கொஞ்ச தூரம் நடந்தான்.
“புதுக்கால்கள் மாதிரியாகிவிட்டது. ரொம்ப நன்றி” என்றான் அவன்.
பிறகு அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் தேநீர் பருகச் சென்றார்கள். உள்ளத்தைத் தொடும் ஆழ்ந்த குரலில் இக்நாத் தன் வாழ்க்கையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.
“நான்தான் நமது பத்திரிகையை விநியோகம் செய்கிறேன். நடந்து திரிவதில் நான்தான் சளைக்காதவன்.”
“கிராமப்புறத்தில் நம் பத்திரிகையை நிறையப்பேர் வாசிக்கிறார்களா?” என்று கேட்டான் நிகலாய்.
“படித்தவர்கள் எல்லாம்; அவர்கள் பணக்காரராயிருந்தாலுங்கூட, வாசிக்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் அதை நேராக நம்மிடமிருந்து வாங்குவதில்லை....... விவசாயிகள் பணக்காரர்களின் நிலங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதும், அப்பொழுது அந்த நிலத்தை நிலச் சுவான்தார்களிடமிருந்து பெற ரத்தத்தைச் சிந்தவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தானே. பண்ணையார்களின் நிலத்தைப் பிடுங்கி அவற்றைப் பங்கிட்டு, பண்ணையாளர்களும் பண்ணையடிமைகளும் இல்லாதவாறு செய்யப்போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியத்தான் செய்யும். பின் எதற்காக அவர்களோடு சண்டையிட்டுக் கொள்ளவேண்டும்?”