பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

மக்சீம் கார்க்கி


“எனக்குத் தூக்கம் வரவில்லை.” “போ போ. தூங்கு தூங்கு.”

“நீங்க ரொம்பக் கண்டிப்பானவர் இல்லையா? சரி நான் போகிறேன். நீங்கள் கொடுத்த தேநீருக்கு. ரொம்ப நன்றி...... அன்புக்கும்தான்....”

அவன் தாயின் படுக்கைமீது ஏறிப் படுத்தவாறு தன் தலையைச் சொறிந்துகொண்டே முனகினான்;

“இப்போது சாமான்களெல்லாம் தார் எண்ணெய் நாற்றம் எடுக்கப் போகிறது... இதிலெல்லாம் ஓர் அர்த்தமுமில்லை..... எனக்குத் தூக்கமும் வரவில்லை.... அந்த ரெண்டுங்கெட்டான் ஜனங்களை இவர் எவ்வளவு சுளுவாகத் தாக்கிப் போசினார்...... அந்தப் பிசாசுகள்...”

திடீரென்று அவன் தூங்கிப்போய், உரத்துக் குறட்டை விட ஆரம்பித்தான். அவனது வாய் பாதி திறந்தவாறு இருந்தது: புருவங்கள் ஏறியிருந்தன.

21

அன்று மாலையில் இக்நாத் கெலாய் வெஸோவ்ஷிகோவுக்கு எதிராக, ஒரு சின்ன நில அடி அறையில் உட்கார்ந்து தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தான்:

“மத்திய ஜன்னலில் நாலு தடவை தட்டவேண்டும்...”

“நாலு தடவையா?” என்ற ஆர்வத்தோடு கேட்டான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ்.

“முதலில் மூன்று—இந்த மாதிரி” என்று கூறிக்கொண்டே அவன் மேஜை மீது தட்டிக் காண்பித்தான், “ஒன்று. இரண்டு, மூன்று ஒரு விநாடி பொறு, அப்புறம் இன்னொரு முறை.”

“புரிந்துகொண்டேன்.”


“உடனே செம்பட்டைத் தலையனான ஒரு முஜீக் வந்து கதவைத் திறப்பான்; திறந்து; ‘நீ மருத்துவச்சிக்காக வந்தாயா?’ என்பான். உடனே: “ஆமாம். முதலாளியின் மனைவியிடமிருந்து வருகிறேன்” என்று நீ சொல்ல வேண்டும். அவ்வளவுதான். அவன் உன்னைப் புரிந்து கொள்வான்.”

அவர்கள் இருவரும் ஒருவர் தலையோடு ஒருவர் தலை முட்டுமாறு உட்கார்ந்திருந்தனர். இருவரும் குண்டுக் கட்டான பலசாலிகள், அவர்கள் இருவரும் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை, தாய் தன் மார்பில் கரங்களைக் கோத்தவாறு நின்று கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் கூறிய மர்மமான சங்கேதச் சொற்களையும், தட்டுவதன் அர்த்த பாவத்தையும் காண அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.