454
மக்சீம் கார்க்கி
“அப்படியா? நாம் அதற்கேனும் நமது திட்டத்தை உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று மெதுவாகச் சொன்னாள் அந்த யுவதி.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டே வாசல்நடைக்கு வந்தான் நிகலாய் “வணக்கம், சாஷா.”
அந்த யுவதி தன் கரத்தை நீட்டியவாறே கேட்டாள்:
“ஏன் கூடாது? எல்லோரும் இது ஒரு நல்ல திட்டம் என்றுதான் கூறுகிறார்கள்.”
“ஆனால், இதை நிறைவேற்றி வைப்பது யார்? நமக்கெல்லாம் ஒரே வேலையாயிருக்கிறதே.”
“நான் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே எழுந்தாள் சாஷா. “எனக்கு அவகாசம் இருக்கிறது.”
“ரொம்ப சரி, ஆனால் மற்றவர்களைக் கேட்டுக் கலந்து கொள்ளவேண்டும்....”
“நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போதே போகிறேன்.”
மீண்டும் அவள் தனது மெல்லிய விரல்களால் தனது கோட்டுப் பித்தான்களை அவசர அவசரமாக மாட்ட முயன்றாள்.
“முதலில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்”என்றாள் தாய்.
“எனக்கு ஒன்றும் களைப்பாயில்லை”என்று அமைதியான புன்னகையோடு கூறினாள் அந்தப் பெண்.
வாய்பேசாது அவர்களோடு கை குலுக்கிவிட்டு அவள் மீண்டும் பழைய விறைப்போடும் கடுமையோடும் வெளியில் சென்றாள்.
தாயும் நிகலாயும் ஜன்னலருகே சென்றார்கள். வெளி முற்றத்தைக் கடந்து வாசல் வழியாக அவள் சென்று மறைவதை இருவரும் கவனித்தார்கள். நிகலாய் லேசாகச் சீட்டியடித்தவாறே மேஜை முன் வந்து உட்கார்ந்து எழுதத் தொடங்கினான்.
“அவளுக்குச் செய்வதற்கு மட்டும் ஏதாவது வேலை கொடுத்துவிட்டால் போதும், உடனே அவள் மனம் தேறிவிடுவாள்” என்று ஏதோ யோசித்தவாறே கூறினாள் தாய்.
"ஆமாம்” என்றான் நிகலாய். பிறகு அவன் தாயின் பக்கமாகத் திரும்பி. அன்பு ததும்பும் புன்னகையோடு பேசினான்: “நீலவ்னா. உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை போலிருக்கிறது. தான் காதலிக்கும்