பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

மக்சீம் கார்க்கி


"என் அன்பே!” என்று நடுநடுங்கும் கையால் அவளை இழுத்து அணைத்துக்கொண்டே கத்தினாள் தாய். “என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்! தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை.”

“இவள் எங்களோடு வருகிறாள்!” என்று நிகலாயைப் பார்த்துச் சொன்னாள் அந்தப் பெண்.

“அது உங்கள் பாடு” என்று தலையைத் தொங்கவிட்டவாறே பதில் சொன்னான் நிகலாய்.

“ஆனால், நாம் இருவரும் சேர்ந்து போகக்கூடாது. நீங்கள் அந்த வெட்டவெளி மைதானத்துக்கு அப்பாலுள்ள தோட்டத்திலே போய் இருக்கவேண்டியது. அங்கிருந்தே சிறைச் சாலைச் சுவரைக் காண முடியும். ஆனால் யாராவது உங்களைப் பிடித்து ஏதாவது கேள்விகேட்டால், அங்கு வந்ததற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?”

“ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.

“மறந்துவிடாதீர்கள். சிறைச்சாலைக் காவலாளிகளுக்கு உங்களை நன்றாகத் தெரியும்!” என்று எச்சரித்தாள் சாஷா; “அவர்கள் உங்களை அங்குக் கண்டுவிட்டால்......”

“அவர்கள் என்னைக் காணமாட்டார்கள்!”

தாய் தனது உள்ளத்திலே எழுந்த ஒரு நம்பிக்கையினால் புத்துயிர் பெற்றுப் பார்த்தாள். அந்த நம்பிக்கைச் சுடர் அவளது, இதயத்திலே கொஞ்சம் கொஞ்சமாகக் கனன்று விரிந்து, இப்போது திடீரென்று ஒரு ஜுர வேகத்துடன் பிரகாசமாக விம்மியெழுந்து எரிந்தது.

“ஒரு வேளை அவனும்கூட!”

ஒரு மணி நேரம் கழித்துத் தாய் சிறைச்சாலைக்குப் பின்புறமுள்ள வெட்ட வெளியில் இருந்தாள். ஊசிக்காற்று சுள்ளென்று வீசியது. அந்தக் காற்று அவளது உடைகளைப் பிளந்து புகுந்து வீசியது. உறைந்துபோன தரையில் மோதியறைந்தது. அவள் சென்றுகொண்டிருந்த தோட்டத்தைச் சுற்றியுள்ள முள்வேலியை அசைத்தாட்டியது. அதன் பின்னர் உருண்டோடிச் சென்று சிறைச்சாலைச் சுவர்மீது முழுவேகத்தோடும் முட்டி மோதியது. சிறைச்சாலைக்குள்ளே எழும் மனிதக் குரல்களை அந்தக் காற்று வாரியெடுத்து வான வெளியில், நிலவின் தொலை முகட்டை அவ்வப்போது ஒரு கணம் காட்டி காட்டிப் பறந்தோடும் மேகமண்டலத்தில் சுழற்றிவிட்டெறிந்தது.