பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

528

மக்சீம் கார்க்கி



அதற்குப் பதிலும் கூறிக்கொண்டாள்:

“இன்னும் அகப்படவில்லை.”

ஆனால் உடனேயே அவள் பெரு முயற்சி செய்து மீண்டும் தனக்குள் உறுதியோடு சொல்லிக் கொண்டாள்.


“அகப்பட்டுவிட்டேன்!”

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்; ஆனால் எதுவும் அவள் கண்ணில்படவில்லை, அவள் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பளிச்சிட்டுத் தோன்றின.

“இந்தத் தோல் பெட்டியை விட்டுவிட்டு நழுவிவிடலாமா?”

இந்த எண்ணத்தை மீறி இன்னொரு எண்ணம் பளிச்சிட்டது:

“என்னது? என் மகனது வாசகங்களை நிராகரித்துவிட்டுச் செல்வதா? இவர்கள் போன்றவர்களிடம் விட்டுவிட்டுச் செல்வதா?”

அவள் பெட்டியை இறுகப் பிடித்தாள்.

“இதையும் தூக்கிக்கொண்டே போய்விடலாமா? ஓடி விடலாமா?”

இந்த எண்ணங்கள் எல்லாம் அவளுக்கு அன்னியமாய்த் தோன்றின. யாரோ வேண்டுமென்றே இந்த எண்ணங்களைத் தன் மனத்தில் திணிப்பது போல இருந்தது. அவை அவளது மனக்குகையிலே எரிந்து கனன்றன: ஊசி முனைகளைப் போல் அவளது நெஞ்சைத் துளைத்தன, அந்த வேதனையுணர்ச்சியால் அவள் தன்னை மறந்தாள்; தனக்கு அருமையான சகலவற்றையும், பாவெலையும் கூட மறந்தாள். ஏதோ ஒரு பகைச் சக்தி அவளது தோள்களையும் நெஞ்சையும் அழுத்திக்கொண்டு அவளை மரண பயத்துக்கு ஆளாக்குவது போலிருந்தது. அவளது நெற்றிப் பொருத்திலுள்ள ரத்தக் குழாய்கள் படபடத்துத் துடித்தன. அவளது மயிர்க்கால்களில் உஷ்ணம் பரவுவது மாதிரி இருந்தது.

திடீரென்று அவள் பெருமுயற்சி செய்து தன் எண்ணங்களையெல்லாம் கேவலமானதாக, வலுவற்றதாகக் கருதி அவற்றை மிதித்து ஒதுக்கினாள், தனக்குத் தானே கம்பீரமாகச் சொல்லிக்கொண்டாள்.

“உனக்கு வெட்கமாயில்லை?”

இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவள் தெளிவடைந்தாள். அவள் மனத்தில் தைரியம் குடிபுகுந்தது. தனக்குள் பேசிக்கொண்டாள்:

“உன் மகனை இழிவுபடுத்தாதே. இதற்குப் போய் யாராவது பயப்படுவார்களா?”