பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

533


ஒரு போலீஸ்காரன் தனது கொழுத்த பெருங்கையினால் அவளது கழுத்தை எட்டிப்பிடித்து உலுக்கினான்;

“வாயை மூடு”

அவளது தலை சுவரில் மோதியது. ஒரு கணநேரம் அவளது இதயத்தில் பயம் சூழ்ந்து இருண்டது. ஆனால் மறுகணமே அந்தப் பயம் நீங்கி ஒரு ஜோதி வெள்ளம் பொங்கியெழுந்து அந்த இருளை அப்பால் துரத்தியடித்தது.

“போ, போ” என்று சொன்னான் அந்தப் போலீஸ்காரன்.

“எதைக் கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்! நீங்கள் இப்போது வாழ்கின்ற வாழ்க்கையைவிட எதுவும் கொடுமை வாய்ந்ததாக இருக்கப் போவதில்லை.....”

“வாயை மூடு. நான் சொல்லுகிறேன். வாயை மூடு.”

அந்தப் போலீஸ்காரன் அவள் கையைப் பிடித்து, வெடுக்கென்று இழுத்தான். இன்னொரு போலீஸ்காரன் அவனது மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டான், இருவருமாக அவளை இழுத்துச் சென்றனர்.

“உங்களது இதயத்தையே தின்றுகொண்டிருக்கும் கசப்பைவிட தினம் தினம் உங்களது நெஞ்சையே சுவைத்துக் கடிக்கும் கொடுமையை விட.......”

அந்த உளவாளி அவளை நோக்கி ஓடி வந்தான். தனது முஷ்டியை அவளது முகத்துக்கு நேராக உயர்த்திக் காட்டிக் கத்தினான்.

“ஏ, நாயே வாயை மூடு!”

அவளது கண்கள் அகன்று விரிந்து பிரகாசித்தன; அவளது தாடை துடிதுடித்தது. வழுக்கலான கல் தரையின் மீது காலைப் பலமாக ஊன்றிக்கொண்டு அவள் மேலும் கத்தினாள்.

“அவர்கள் மறு பிறவி எடுத்த என் ஆத்மாவைக் கொல்லவே முடியாது!”

“ஏ, நாயே!”

அந்த உளவாளி அவளது முகத்தில் அறைந்தான்.

“வேண்டும், அந்தக் கிழவிக்கு!” என்று யாரோ வெறுப்போடு கத்தினார்கள்.

ஒரே கணத்தில் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்த ஏதோ ஒன்றால் அவள் கண்கள் இருண்டன. ரத்தத்தின் உப்புக்கரிக்கும் ருசி அவள் வாயில் தட்டுப்பட்டது.

அவளைச் சுற்றிலும் எழுந்த ஆவேசக் குரல்களால் தாய் மீண்டும் உணர்ச்சி பெற்று விழிப்புற்றாள்.

“அவளைத் தொடாதே!”

“வாருங்களடா பயல்களா?”