பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

534

மக்சீம் கார்க்கி



“டே போக்கிரி, உன்னைத்தான்!”

“அவனை உதையடா!”

“அவர்கள் நம் அறிவை ரத்தமயமாக்க முடியாது.”

“அவர்கள் அவளைப் பின்னாலிருந்து கழுத்தில் கைகொடுத்துத் தள்ளினார்கள்; அவளது தலையிலும் தோளிலும் அறைந்தார்கள். கூச்சலும் கும்மாளமும் அலறலும் விசில் சப்தமும் ஒன்றோடொன்று எழும்பியொலித்த குழப்பத்தில் அவள் கண்முன்னால் பளிச்சிட்டுத் தோன்றி எல்லாம் சுழல ஆரம்பித்தன; அந்தக் கூக்குரல்கள் அவள் காதைச் செவிடுபடச் செய்தன. அவளது தொண்டை அடைத்தது; திணறியது; அவளது காலடியிலே இருந்த நிலம் நழுவி இறங்கியது; அவள் கால்கள் தள்ளாடின, உடம்பு வேதனையின் குத்தல் உணர்ச்சியால் பளுவேறி உழலாடி, ஆதரவற்றுத் தடுமாறியது. எனினும் அவளது கண்கள் மட்டும் தமது பிரகாசத்தை இழக்கவில்லை. அந்தக் கண்கள் மற்ற கண்களை நெருப்பாகக் கனன்றெரியும் கண்களை, தனக்குப் பழக்கமான துணிவாற்றலின் ஜோதியோடு ஒளி. செய்யும் கண்களை, தனது இதயத்துக்கு மிகவும் அருமையாகத் தோன்றிய கண்களைக் கண்டு களித்தன.

அவர்கள் அவளை வாசற்புறமாகத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

அவள் ஒரு கையைப் பிடுங்கி விடுவித்துக்கொண்டு கதவின் கைப்பிடியை எட்டிப் பிடித்தாள்.

“இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது!”

அவர்கள் அவள் கையில் பட்டென்று அறைந்தார்கள்.

“ஏ, முட்டாள்களே: நீங்கள் வீணாக எங்கள் பழியைத்தான் தேடிக் கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒரு நாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப்போகின்றன!”

ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறடித்தான்.

“அதிருஷ்ட்ங்கெட்ட பிறவிகளே!” என்று அவள் திணறினாள்.

யாரோ ஓர் உரத்த தேம்பலால் அதற்குப் பதில் அளித்தார்கள்.

1907 ஆண்டு.