பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

ஆர்வவமும் வர்க்க உணர்வூட்டிப் போராட்டத்தில் தம்மையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல்படைத்தது தாய் என்று சொல்லிப் பாராட்டினார். உண்மையில் தாய் இந்தப் பணியை மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து செவ்வனே செய்து வந்துள்ளது.

மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1962 ஆம் ஆண்டில் கார்க்கியின் படைப்புகளைப் பத்துப் பகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது.

கார்க்கியின் “தாய்” போல, கோடிக்கணக்கான மக்களை விழிப்படையச் செய்த நூல்கள் இவ்வுலகில் சிலவே. ரஷ்ய மொழியில் மட்டும் இருநூற்றுக்கு மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன. வேற்று மொழிகள் 127 மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகள் வந்துள்ளன. இவ்விவரமே “தாய்” சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமானது.

தமிழ் மொழியில் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவர் தெர்.மு.சி. ரகுநாதன். இவரே “தாய்” புதினத்தைத் தமிழில் ஆக்கியுள்ளார். முதல் பதிப்பை 1975-ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது. மூன்றாம் பதிப்பை 1987-ல் ராதுகா பதிப்பகம் வெளியிட்டது.

1990-க்குப் பிறகு சோவியத் நாடும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் ஜனநாயக சோசலிச நாடுகளும் சிதறிப்போன பின்னணியில் புதிய பொருளாதாரக் கொள்கையான உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் - கடுமையாக இந்நாட்டில் பின்பற்றப்படும் வேளையில் மீண்டும் “தாய்” வேண்டப்படுகிறாள்.

வழக்கம்போல் நல்லது பேணும் தமிழ் மக்கள் ஆதரவு உறுதி என்னும் நம்பிக்கையில் - எதிர்பார்ப்பில் - பெருமிதத்தில் நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டகம் தன்னுடைய முதல் பதிப்பாகத் “தாய்” புதினத்தை வெளியிடுகிறது. மக்சீம் கார்க்கியின் பணியையும் பெருமையையும் வாசகர்களுக்கு நினைவூட்டக் கார்க்கியின், வாழ்க்கைக் குறிப்பும் “தாய்” சுருக்கமும் இணைக்கப் பட்டுள்ளன.

- பதிப்பகத்தார்