பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

53


மூச்சு விடக்கூட முனையாது, பதிலுக்காகவும் காத்திராது, அவன் பெலகேயாவை நோக்கிச் சரமாரியாக, உணர்ச்சியற்று உடைந்துபோன வார்த்தைகளைப் பொழிய ஆரம்பித்தான்;

“பெலகேயா நீலவ்னா எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகன் எப்படி இருக்கிறான்? அவன் கல்யாணம் ஏதும் பண்ணப் போகிறானா, இல்லையா? அவனுக்கு இதுதான் சரியான பருவம், அவ்வளவுதான் நான் சொல்வேன். பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் ஆகிறதோ அவ்வளவுக்குப் பெற்றோர்களுக்குச் சிரமம் குறையும். புளிக் காடியிலே கிடக்கும் காளானைப் போல, ஒரு மனிதன் குடும்பஸ்தன் ஆனால்தான் அவனது உடலும் உள்ளமும் நல்ல நிலைமை அடையும். நானாயிருந்தால், இதற்குள் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்திருப்பேன். தங்கள் சொந்தப் புத்தியால் வாழவேண்டும் என்று ஜனங்கள் விரும்புகிற இந்த நாளிலே, மனிதப்பிறவி மீது கடுமையான கண்காணிப்புத் தேவை. எல்லாரும் அவரவர் நினைத்தபடி வாழத் தொடங்கிவிட்டனர். என்னென்னவோ நினைக்கிறது. எதை எதையோ தன்னிச்சையாய்ச் செய்கிறதும் நாம் கண்டித்து வைக்க வேண்டிய சமாச்சசாரம்தான். இந்தக் காலத்து இளவட்டப்பிள்ளைகள் தேவாலயத்துக்கும் போவதில்லை; நாலுபேர் கூடும் இடத்துக்கும் வருவதில்லை; எங்கேயோ நழுவி ஓடிப்போய் இருட்டிலே கூடித் தமக்குள்ளாக என்னென்ன இரகசியத்தையோ குசுகுசுத்துப் பேசிக்கொள்கிறார்கள். எதற்காக இரகசியமாய்ப் பேசவேண்டும், என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் மனிதர்களைக் கண்டு வெறுத்து ஒதுங்குகிறார்கள்? ஜனங்களின் முன்னால், உதாரணமாக, சாராயக் கடையில் கூட வெளியிட முடியாத இரகசியம் அப்படி என்ன இருக்கிறது! இரகசியங்களம்மா! புனித தேவாலயம் ஒன்றுதான் இரகசியங்களுக்கே உரிய இடம்; மற்றப்படி, மற்ற இரகசியங்களெல்லாம் மூலையிருட்டிலே நடப்பவை; சபல புத்தி படைத்தவர்களின் இரகசியங்கள்தான். சரி போகட்டும் நீங்கள் நலமாயிருங்கள், பெலகேயா நீலவ்னா !”

அவன் தனது தொப்பியை அநாயாசமாகத் தூக்கிக் காற்றில் வீசிக்கொண்டே சென்றுவிட்டான்; தாய் திகைப்புற்று நின்றாள்.

இன்னொரு முறை. விலாசாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரியான மரியா கோர்சுனவா தாயைச் சந்தித்தாள். மரியா ஒரு விதவை; அவளது கணவன் ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. தொழிற்சாலை வாசலில் சாப்பாடு விற்று வாழ்பவள். கடைவீதியில் தாயைக் கண்டு அவள் சொன்னாள்,