பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

55


"அவர்களுக்கும் நீங்கள் ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது? அவர்களில் கெட்டிக்காரியாகப் பார்த்து அழைத்து வந்து கற்றுக்கொடுங்களேன்” என்றாள் தாய்.

“அது சங்கடமான வேலை.”

“ஏன் முயன்று பார்த்தால் என்ன?” என்றான் ஹஹோல்.

பாவெல் பதில் சொல்வதற்கு முன் சிறிது மௌனம் சாதித்தான்.

“அவர்களும் வந்துவிட்டால், பிறகு ஜோடி சேர்த்துக்கொண்டு போய்விடுவார்கள்; சிலர் கல்யாணமும் பண்ணிக்கொள்வார்கள்; அப்புறம் அத்துடன் எல்லாம் சமாப்திதான்!”

தாய் சிந்தனையில் ஆழ்ந்தாள். பாவெலின் சந்நியாச வைராக்கியத்தைக் கண்டு அவளது மனம் கலக்கமுற்றது. ஒவ்வொருவரும், ஹஹோலைப் போன்ற மூத்தத் தோழர்கள்கூட, பாவெலின் வார்த்தையை மதித்து நடந்தார்கள்; அவனைக் கண்டு அவர்களெல்லாம் பயப்படுவதாகவும், அவனது கண்டிப்புக் குணத்தால் அவனை யாருமே விரும்பவில்லையெனவும் அவளுக்குத் தோன்றியது.

ஒரு நாள் இரவு அவள் படுக்கைக்குப்போன பிறகும், ஹஹோலும் பாவெலும் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அவர்கள் இருவரும் அடுத்த அறையில் மங்கிய குரலில் ஏதோ பேசிக்கொண்டார்கள்; எனினும் அந்தப் பேச்சு அவளது காதிலும் விழுந்தது.

“அந்த நதாஷாவை என் மனத்துக்குப் பிடித்திருக்கிறது” என்று திடீரெனச் சொன்னான் ஹஹோல்.

“தெரியும்” என்று சிறிது கழித்துச் சொன்னான் பாவெல்.

ஹஹோல் இடத்தைவிட்டு எழுந்து அறைக்குள் நடமாடும் காலடியோசையை அவளால் கேட்க முடிந்தது; அவன் வழக்கம் போலவே சோக இசையை மெதுவாகச் சீட்டியடிக்க ஆரம்பித்தான். மீண்டும் அவன் சொன்னான்.

“இதை அவள் கவனிக்கிறாளா? என்று சந்தேகிக்கிறேன்.”

பாவெல் பதில் பேசவில்லை.

“சரி. நீ என்ன நினைக்கிறாய்?” என்று மெதுவாகக் கேட்டான் ஹஹோல்.

“கவனித்திருக்கிறாள், அதனால்தான் இங்கு வருவதையே அவள் நிறுத்திவிட்டாள்” என்றான் பாவெல்.