பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தன்னைப்பெற்று வளர்த்த தாய் தந்தையரின் நினைவைப் போற்றும் வகையில் தமது புதுமனைக்கு “மங்களம் குமரன் வீடு” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று முடிவிட்டவண்ணம் இராப் பொழுதைக் கழித்தார், சிவசிதம்பரம்.

ஆனால், விடிந்தபொழுது லால்பகதூரின் உயிரையன்றோ கொள்ளை கொண்டது! தாய்த் திருநாட்டின் சீலம் பேண, தாஷ்கண்ட் பயணப் பட்ட மாமேதை, தாயகம் திரும்பாமலே தன் பணிக்கு ஒரு முத்திரை பதித்துக் கொண்ட இடம் தாஷ்கண்ட் அல்லவா? சாஸ்திரியின் அமர நினைவுக்கு ஒரு சின்னமென அமைந்து விட்டதே தாஷ்கண்ட்!

உடலும் உள்ளமும் சோர்ந்து விழ, சாஸ்திரிஜீயின் அமர நினைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, புதுப்பொலிவுடன் திகழ்ந்த தமது பங்களாவை நோட்டமிட்டார் சிவசிதம்பரம்.

"ஆம்; இம்மனை அமரர் சாஸ்திரியின் நினைவுக்கு.-- அவரது தாஷ்கண்ட் சமாதான யாத்திரைக்கு ஒரு நினைவுச் சின்னம். ஆகவே, இம் மனைக்கு 'தாஷ்கண்ட் வீடு' என்றே பெயர் சூட்ட வேண்டும் "என்று தீர்மானித்தார்.

பெண்டு பிள்ளைகள் ஏக மனதாகவும், ஒருமைப் பட்ட ஐக்கியத்துடனும் தந்தையின் முடிவை ஆமோதித்தனர்.

மழை விடாமல் பெய்தது!