இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறந்தாங்கி அன்றைக்குத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
தியாகி சிவசிதம்பரம் அவர்களின் பங்களாவும் அன்றுதான் கிரகப்பிரவேசம். அதனால்தான், அவ்வூரின் அழகே தனிப்பட்ட மகிமையுடன் விளங்கிக் கொண்டிருந்தது.
திருவாளர் சிவசிதம்பரம் ஐந்து ஏக்கர் தியாகியல்ல; உண்மையிலேயே தியாகம் செய்த குடும்பத்தில் உதித்தவர். நாட்டின் விடுதலைக்கென அப் பகுதியில் நடைபெற்ற கிளர்ச்சியின்போது, அவர் சரியாக மூன்றரைமாதக் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்.
- "தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
- தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!"
பாரதியின் இப்பாடல் வரிகளைச் சிவசிதம்பரம் பாடக் கேட்கப்பயந்து விட்டானாம் வெள்ளைக்காரக் கலெக்டர் வின்ஸ்டன்.