பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

திருக்குறள்


பரிசுத்தமான நிலை என்று சொல்லப்படுவது ஆசையற்ற தன்மையே ஆகும். அத்தகைய தன்மை மெய்ம்மைப் பொருளாகிய கடவுளை விரும்ப வரும். 364

5.அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பற்றற்றவர் (துறவிகள்) என்று சொல்லப்படுபவர் ஆசையை ஒழித்தவரே ஆவர். ஆசையினை ஒழிக்காத மற்றவர் அவ்விதமாகப் பற்றற்று வாழ்பவர் அல்லர். 365

6.அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

ஒருவனை வஞ்சித்து அவனைப் பிறப்பு, இறப்புக்களில் ஈடுபடச் செய்வது அவா என்னும் உலக ஆசையே ஆகும். ஆதலால், அந்த அவா நெருங்காதபடி அதற்கு அஞ்சி வாழ்வதே அறம் ஆகும். 366

7.அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

ஒருவன் உலக ஆசையை முற்றிலும் ஒழித்தால், அவன் கெட்டுப் போகாமல் இருப்பதற்குக் காரணமாகிய நல்ல செயல் அவன் விரும்புகின்றபடியே உண்டாகும். 367

8.அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

ஆசையில்லாதவர்களுக்குத் துன்பம் சிறிதும் இராது. அந்த ஆசையானது இருக்குமானால், எல்லாத் துன்பங்களும் மேன்மேலும் ஒழியாமல் வந்து கொண்டிருக்கும். 368

9.இன்பம் இடையறா தீண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

துன்பங்களுள் பெரியதாகிய ஆசை என்னும் துன்பம் ஒருவனுக்கு இல்லாமல் ஒழித்து விடுமேயானால், அவனுக்கு இன்பம் இடை விடாது மேன்மேலும் வந்து சேரும். 369

10.ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

ஒருபோதும் நிரம்பாத தன்மையுடைய ஆசையை ஒழித்து விட்டால், அதுவே எந்தக் காலத்திலும் மாறாத தன்மையினையுடைய இன்பத்தைத் தரும். 370