பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறை மாட்சி

97


4.அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.

நீதிநெறியில் தவறாமல் நின்று, குற்றங்களைப் போக்கி, வீரத்தில் குறையாத மதிப்பினை உடையவன் அரசன் என்று சொல்லுதற்குத் தகுதியுடையவனாவான். 384

5.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் உண்டாக்கிக் கொள்ளுதலும், அவ்வழியால் வந்த பொருள்களைச் சேர்த்து வைத்தலும், சேர்த்தவைகளைப் பாதுகாத்தலும், அவ்விதம் பாதுகாத்த பொருள்களை ஒழுங்காகச் செலவு செய்யப் பகுத்து வைத்தலும் ஆகிய இவைகளைச் செய்ய வல்லவனே அரசன் என்று சொல்லத் தக்கவனாவான்.

இயற்றல்-உண்டாக்குதல்; ஈட்டல்-சேர்த்தல்; வகுத்தல்-நாட்டின் நன்மைக்கான பல துறைகளில் செலவழிக்க வேண்டிய பொருள் இவ்வளவு என்று பகுத்து ஒதுக்கி வைத்தல். 385

6.காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

பலரும் எளிதாக வந்து காணக் கூடியவனாகவும் கடுமையாகப் பேசாதவனாகவும் இருந்தால், அந்த அரசனை உலகிலுள்ளோர் அனைவரும் புகழ்ந்து கூறுவர். 386

7.இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

இனிய சொற்களைச் சொல்லி, வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்ற வல்ல அரசனுக்கு இவ்வுலகம் அவனுடைய சொல்லின் ஆற்றலாலேயே, அவன் நினைத்த படி ஆளக் கூடியதாக இருக்கும். 387

8.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

நீதிமுறை தவறாது நடந்து குடிகளைக் காப்பாற்றும் அரசன் மக்களால் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படுவான். 388