பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி

99


களும் ஆகிய இவ்விரண்டும். இவ்வுலகத்தில் வாழ விரும்பும் மக்களுக்குக் கண்களுக்குச் சமமானவை என்று பெரியோர் கூறுவர்.

எண்-கணக்கு நூல்கள்; எழுத்து-இலக்கண, இலக்கிய நூல்கள். 392 .

3.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

படித்தவர்களே கண்ணுடையவர்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்கள். படியாதவர் முகத்தில் இரண்டு. கண்களைப் பெற்று இருந்தாலும், அவை கண்கள் அல்ல. அவர்கள், தம் முகத்தில் இரண்டு புண்களை உடையவரே.

கல்லாதவர் தம் கண்களின் வயப்பட்டுப் பல பொருள் களைக் கண்டு ஆசை கொண்டு அவற்றையடைய முயன்று துன்புறுவர். ஆதலன், அவர் கண்களைத் துன்பம் தரும் புண்கள் என்று கூறினார். 393

4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பலரும் மகிழும்படியாக மக்களிடம் கூடிப் பழகி, 'இனி இவரை மறுபடியும் எப்போது காண்போம்' என்று நினைந்து வருந்தும் படியாக அவர்களை விட்டுப் பிரிதல் கல்வியிற் சிறந்த புலவர்களின் செயலாகும்.

உவப்ப - மகிழும்படி; தலைக்கூடுதல் - வந்து சேர்ந்து பழகுதல்; உள்ளல் - நினைந்து வருந்துதல்; பிரிதல் - நீங்குதல்; அனைத்து-அத்தன்மையது. 394

5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.

செல்வமில்லாத வறியவர்கள், செல்வம் உடையவர்களிடம் உள்ள பொருளைப் பெற ஏங்கி நின்று பணிவுடன் கேட்டுப் பெறுவர். அது போலக் கல்வியுடையவர்களிடம், கல்வியில்லாதவர்கள் அக்கல்வியறிவைப் பெறும் பொருட்டு. ஏங்கி நின்று, பணிவுடன் கேட்டறிந்து கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கற்றவரே உயர்ந்தோராவர். அங்ஙனம் கல்லாதவர், இழிந்தவராகவே கருதப்படுவர்.