பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கேள்வி

105


3.செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

செவியுணவாகிய கேள்வி அறிவினையுடையவர் இவ்வுலகத்தில் வாழ்கின்றவராயினும், அவியுணவைக் கொண்டு வாழும் தேவர்களுக்குச் சமம் ஆவர்.

அவியுணவு-வேள்வியின் போது தேவர்களுக்காக வேள்வித் தீயில் இடும் உணவு; ஆன்றோர் - பெரியோர். இங்கே தேவர்களைக் குறிக்கும். 413

4.கற்றிலன் ஆயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

ஒருவன் சிறந்த நூல்களைக் கற்காமல் இருந்தாலும், ஆக்ககைய நூல்களைக் கற்றவரிடம் சென்று, அவர்கள் சொல்லக் கேட்டாவது அறிதல் வேண்டும். அவ்விதம் கேட்பதால் அந்தக் கேள்வி ஞானம் அவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் செல்லும் ஒருவனுக்கு உதவும் ஊன்றுகோல் போலத் துணையாக இருக்கும்.

அஃது-அது, கேள்வியால் உண்டாகும் அறிவு; ஒற்கத்தின்-தளர்ச்சி வந்த காலத்தில்; ஊற்று - ஊன்றுகோல்; ஊன்று என்பது ஊற்று என்று திரிந்தது. 414

5.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

ஒழுக்கத்திற் சிறந்த பெரியோர்களது வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்திலே செல்வோனுக்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒருவனுக்கு உதவும்.

இழுக்கல்-வழுக்குதல்; உடையுழி-உடைய போது; அற்று-அந்தத் தன்மையுடையது. 415

6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

ஒருவர் நல்ல பொருளைக் கேட்டறிய வேண்டும். அஃது எவ்வளவு சிறியதாக இருப்பினும், கவலையில்லை. அவ்வாறு கேட்டறிதல் அவர் கேட்ட அளவுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.

 

தி.-8