பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

திருக்குறள்



எனைத்தானும்-எவ்வளவு சிறியதாக இருந்தாலும்; அனைத்தானும் -அவ்வளவாயினும், ஆன்ற-நிறைந்த. 416

7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.

நுட்பமாக ஆராய்ந்து அறிந்து நிறைந்த கேள்வியறிவை யுடையவர்கள், ஏதோ ஒரு காரணத்தால், ஒன்றைத் தவறாக உணர்ந்தாலும், அறியாமையைக் காட்டும் சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

பேதைமை சொல்லல்-அறியாமையைக் காட்டும் சொல்லைச் சொல்லுதல்; இழைத்து உணர்தல் - நுட்பமாக ஆராய்ந்து அறிதல்; ஈண்டிய - நிறைந்த. 417

8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

நல்ல கேள்வி ஞானம் இல்லாத செவிகள், கேட்கும் திறமுடையயனவாயினும், கேளாத செவிகட்கு சமமே ஆகும்.

தோட்கப்படாத செவி - அரிய செய்திகளைப் பல முறை கேட்டுப் பண்படாத செவிகள். 418

9.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.

நுட்பமான பொருள்களைக் கேட்டு அறியாதவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினையுடையவராக இருத்தல் முடியாது.

நுணங்கிய-நுட்பமான; வணங்கிய வாயினர்-வணக்கமான சொற்களைப் பேசுகின்றவர். 419

10.செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

கேள்விச் சுவையினைத் தம் காதுகளால் உணர்ந்து அனுபவிக்க முடியாமல், நாவினாலே நல்ல உணவின் சுவைகளை மட்டும் அறிந்து அனுபவிக்கும் மனிதர்கள் இறந்தால்தான் என்ன? வாழ்ந்தால்தான் என்ன?

செவியிற் சுவையுணர்தல் - சிறந்த கருத்துக்களைக் காதுகளால் கேட்டு இன்புறுதல். 420