பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

திருக்குறள்


என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல் அவர் சேரும் இனம் காரணமாகவே ஏற்படுகிறது.

உணர்ச்சி-அறிவு: இன்னான்-இத்தன்மையன், இந்தக் குணத்தினை யுடையவன். 453

4.மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.

ஒருவருக்கு, அறிவு அவர் தம் மனத்திலிருந்து தோன்றுவது போலக் காட்டி, அவர் சேர்ந்த இனத்தின் காரணமாகவே தோற்றம் அளிக்கின்றது.

மனத்திலிருந்தே அறிவு உண்டாகிறது என்பது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும், அந்த அறிவு மனத்திலிருந்து தோன்றுவதற்குக் காரணம் இனத்தின் சேர்க்கையே ஆகும் என்பதாம். அறிவு, குணம் இரண்டற்கும் இனமே காரணம். 454

5.மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனத்தூய்மை தூவா வரும்.

ஒருவருக்கு உள்ளம் தூய்மையாக இருத்தல், அவர் செய்யும் செயல் துாய்மையாக இருத்தல் ஆகிய இரண்டு தன்மைகளும் அவர் சேர்ந்துள்ள இனத்தின் துாய்மை காரணமாகவே ஏற்படும்.

தூவா-காரணமாக: (து + ஆக) தூ-பற்றுக்கோடு, காரணம். 455

6.மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனம் தூய்மையாக இருப்பவருக்கு அம்மனத்தின் காரணமாக எஞ்சி நிற்கும் செயலும் நன்றாக இருக்கும். (இனத்தூய்மையால் மனமும் தூய்மையாக இருக்கும் ஆதலால்) குற்றமற்ற இனத்தாரோடு உள்ளவர்க்கு நன்றாகாச் செயல்களே இல்லை; எல்லாச் செயல்களும் நல்ல செயல்களாகவே இருக்கும்.

தூய்மையான இனத்தால் தூய்மையான மனமும், தூய்மையான மனத்தால், தூய்மையான செயலும் உண்டாகும் என்பது பொருள்.