பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றினம் சேராமை

117


மனத் தூய்மையின் மிகுதியால் தோன்றுவது நற்செயல். ஆதலால் மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் என்றார்; எச்சம் என்பதற்குப் புகழ் என்று சிலரும், மக்கள் என்று சிலரும் பொருள் கொள்ளுவர். 456

7.மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனத்தின் நன்மை மக்களுக்கு மேலுலகச் செல்வத்தைத் தரும். இனத்தின் நன்மை இவ்வுலகத்தில் எல்லாப் புகழையும் தரும்.

மன்னுயிர்-இங்கு மக்களைக் குறிக்கும்; ஆக்கம்-ஆக்கப்படுவது, செல்வம்; இங்கே மேலுலகச் செல்வம். 457

8.மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

பெரியோர்கள் இயல்பிலேயே மனத் தூய்மையைப் பெரிதும் உடையவர்களாக இருந்தாலும், இனத்தின் நன்மை அந்த மனத் துய்மைக்கு மேலும் உறுதியினை அளிக்கும்.

ஏமாப்பு-உறுதி, வலிமை அல்லது பாதுகாவல்.

பொதுமக்களுக்கே அன்றிப் பல நற்குணங்களையும் இயல்பாகவே பெற்ற பெரியோர்கட்கும் இன நலம் வலிமையைத் தரும் என்பது கருத்து. 458

9.மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மன நலத்தினால் மறுமை இன்பம் உண்டாகும்; அஃதும் இன நலத்தின் சிறப்பாலேயே வலிமை பெறுகிறது.

இன நலத்தினாலே மனநலமும், மன நலத்தினாலே மறுமை இன்பமும் உண்டாவதால், இன நலம் மறுமை இன்பத்துக்குத் துணையாக இருக்கிறது.

மறுமை-மறுபிறப்பு; இங்கே மறுபிறப்பில் அடையத் தக்க இன்பம். 459