பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெரிந்து செயல் வகை

119


பிறகு வரக் கூடிய வருவாயைக் கருதித் தம் முதற்பொருளையே இழக்கக் கூடிய செயலை, அறிவுடையார் மேற்கொள்ள மாட்டார்.

ஆக்கம்-செல்வம்; இங்கே பின் வரக்கூடிய இலாபம்; ஊக்கார்-மேற்கொள்ளார். 463

4.தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

இழிவு என்னும் குற்றத்துக்கு அஞ்சும் அருங்குணம் வாய்ந்தவர்கள் இந்தச் செயலைச் செய்தால், வெற்றி கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிய வாராத சந்தேகத்துக்கு இடமான ஒரு செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். 464

5.வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

செய்ய மேற்கொண்ட செயலின் வகைகளையெல்லாம் முற்றிலும் ஆராய்ச்சி செய்யாது, ஒரு செயலைச் செய்யத் தொடங்குதல், பகைவராகிய பயிர் நன்றாக வளர்வதற்காக, அவற்றை நல்ல நிலத்திலே நடுதற்குச் சமம் ஆகும்.

அாசன் நன்கு ஆராயாமல் ஒரு செயலைச் செய்வது பகைவருக்கு வேண்டிய அனுகூலங்களையெல்லாம் தானே செய்து வைப்பதற்குச் சமம் ஆகும் என்பதாம். ஒரு குடும்பத் தலைவன், இயக்கத் தலைவன் முதலியவர்களுக்கும் இது பொருந்தும்.

சூழாது-எண்ணிப் பார்க்காமல்; எழுதல்-ஒன்றைச் செய்யத் தொடங்குதல்; பாத்தி-நன்றாக வளரத் தக்க நிலம்; படுப்பது-நிலை பெறச் செய்வது; ஆறு-வழி. 465

6.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

செய்யத் தகாத செயல்களைச் செய்வதனாலும் கேடு உண்டாகும். செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுதி உண்டாகும்.

செய்யத் தகாத செயல்: 1. செய்ய முடியாத பெரிய செயல், 2. செய்தால் பயன் தராதவை, 3. குறைந்த பயன் விளையும் செயல், 4. சந்தேகத்துக்கு இடமான செயல்.