பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

திருக்குறள்


3.ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

வெல்லத் தக்க இடம் அறிந்து முதலில் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு பிறகு, பகைவரிடம் தம்முடைய வல்லமையைக் காட்டினால், வலிமை சிறிதும் இல்லாதவரும் வலிமை யுடையவராகி வெற்றி பெறுவர். 493

4.எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

தாம் எண்ணிய செயலைச் செய்தற்குத் தகுந்த இடத்தை முதலில் அறிந்து கொண்டு அங்கே தங்கியிருந்து பிறகு, தம் செயலை நெருங்கிச் செய்வாராயின் அவரை வெல்லுவதற்கு எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்து விடுவர். 494

5.நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமுள்ள நீரினையுடைய இடத்தில் முதலை பிற உயிர்களை வெல்லும்; அந்த நீரை விட்டு முதலை வெளியே வருமானால், அதனை மற்ற உயிர்கள் வென்று விடும்.

அவரவர் இடத்தில் இருக்கும் போது வலிமை சிறிதும் இல்லாதவரும் வெற்றி பெறுவர்; தம் இடத்தை விட்டு நீங்கினால், மிக்க வலிமை பெற்றவரும் தோல்வியுறுவர் என்பது கருத்து. 495

6.கடலோடா கால்வல் நெடுங்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

தரையில் ஓடக்கூடிய வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓட மாட்டா; கடலில் ஓடக் கூடிய பெரிய கப்பல்களும் நிலத்தில் ஓட மாட்டா.

கால்-சக்கரம்; தேர்-உருளை; வல்-வலிமை பொருந்திய; நாவாய்- பெரிய கப்பல்கள்.

ஒருவருக்கு உகந்த இடம் பிறிதொருவருக்கு உகந்ததாக இராது என்பது கருத்து. 496