பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

 திருக்குறள்


2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

மழையானது உயிர்களுக்குத் தூய்மையான உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருகிறது; தானும் ஓர் உணவுப் பொருளாக இருந்து உதவுகிறது.

துப்பார்க்கு - உண்பவர்க்கு; துப்பு ஆய - சுத்தமான; துப்புஆக்கி - உணவுப் பொருள்களை உண்டாக்கி; துப்பாய தூஉம்-உணவாகி இருப்பதும். 12

3.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யவேண்டிய காலத்தில் தவறாது பெய்தல் வேண்டும். அவ்வாறு பெய்யத் தவறுமானால் கடலால் சூழப்பட்ட இந்தப் பெரிய உலகத்தில் பசி மக்களை வருத்தும். 13

4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

உழவர்கட்கு நீர் வருவாய் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. மழை பெய்வதில் குறைவு நேர்ந்தால் உழவர்கள் ஏர் உழுது பயிர் செய்யமாட்டார்கள். 14

5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மழை, பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும் வல்லது; அங்ஙனம் நீரின்மையால் வருந்தும் மக்களுக்குத் துணையாக இருந்து நீரைப் பொழிந்து அவர்களை வாழ்விக்கவும் வல்லது. 15

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

ஆகாயத்திலிருந்து மழைத் துளிகள் விழுதல் வேண்டும்; இன்றேல் மழை பொழியாத அந்த இடத்திலே பசும் புல்லின் சிறு முனையையும் காணமுடியாது. 16