பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுற்றம் தழால்

137


அரசன் தன்னைச் சூழ்ந்துள்ள அனைவரையும் ஒரே தன்மையிற் பார்க்காமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர்களைக் கவனித்தல் வேண்டும். அவ்விதம் அவன் செய்வானானால், அந்தச் சிறப்பினை நோக்கி, அவனிடம் சுற்றமாக இருந்து வாழ்பவர் பலர் ஆவார்.

பொது நோக்கம்-எல்லாரையும் ஒரு தன்மையாகக் கவனித்தல் 528

9.தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு தன் சுற்றத்தினராக இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால், தன்னை விட்டுப் பிரிந்து போனவர், அவ்விதம் பிரிய நேர்ந்ததற்கு உரிய காரணம் நீங்கியதும், தாமே வந்து சேர்வர்.

அமராமைக் காரணம்-அவ்விதம் பொருந்தியிராததன் காரணம்; இன்றி-நீங்கிய பின்.

தன் நடத்தையில் தவறு கண்டு பிரிந்து போனவர்களும், தன் தவற்றை உணர்ந்து ஒருவன் திருத்திக் கொள்வானானால், வலிய வந்து சேர்வார்கள். 529

10.உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

தன்னிடமிருந்து ஒருவன் பிரிந்து சென்று, பிறகு ஒரு காரணம் குறித்துத் திரும்பி வருவானானால், அரசன் அவன் எண்ணிய உதவியைச் செய்து, அமைதியாக இருந்து, அவன் குணத்தையும் ஆராய்ந்து பார்த்து, அவனை உறவாகக் கொள்ளுதல் வேண்டும்.

உழை-இடம்; இழைத்து-அவனுக்கு வேண்டியதைச் செய்து; எண்ணி-ஆராய்ந்து பார்த்து.

நம்மை விட்டுப் பிரிந்து போனவர்களையும், அவர்களுக்கு வேண்டுவன புரிந்து, சுற்றத்தினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் சேர்த்துக் கொள்ளும் போது சிந்தித்துப் பார்த்தே சேர்த்துக் கொள்ள வேண்டும். 530



தி.-10