பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வான் சிறப்பு

5


7.நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

மேகமானது கடலில் உள்ள நீரை முகந்து மழையாகப் பெய்து அக்கடலை நிரப்புகிறது. அஃது அவ்விதம் செய்யாவிடில் நீண்டு பரந்துள்ள கடல் நீரும் தன் இயல்பில் குறைந்து விடும். அந்தக் கடலில் உள்ள உயிர்களும் வாழ மாட்டா.

தடிதல் - குறைத்தல்; எழிலி-மேகம்; நீர்கை - தன்மை; முத்து முதலியன தோன்றுவதற்கும் மழைநீர் காரணம். 17

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பெய்ய வேண்டிய காலங்களில் மழை பெய்யாவிட்டால் மேலுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் அன்றாடப் பூசைகள் விழாக்கள் முதலியன இங்கே செய்யமுடியாது.

பூசனை - அன்றாட வழிபாடு; சிறப்பு - திருவிழா. 18

9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.

மழை பெய்யவேண்டிய காலங்களில் பெய்யாவிட்டால் இந்தப் பெரிய உலகத்திலே தானம், தவம் என்னும் இரண்டும் நிலைபெற்று நடைபெற மாட்டா. 19

10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நீரின் பெருக்கு மழை இல்லாமல் உண்டாகாது. 20