பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணோட்டம்

149



போர் செய்ய நேர்ந்த போது, தன் பகைவனை வளைக்கச் சென்ற அரசன் முதலில் தனக்கு அரண் அமைத்துக் கொள்ளாமல் இருப்பானேயானால், போதிய பாதுகாவல் இன்மையால், பகைவனைக் கண்டு அஞ்சி விரைவில்அழிவான்.

அரசன் தன் நாட்டில் முன்னதாகவே மதில், அரண், நீர் அரண் முதலிய பலவகை அரண்களையும் வகுத்துக் கொள்ளாவிடின் திடுமெனப் போர் நேர்ந்த போது, போதிய பாதுகாவல் இல்லாமையால் அச்சமுற்று விரைவில் அழிவான் என்றும் பொருள் கொள்ளலாம்.

செரு-போர்; சிறை செய்யா-அரண் அமைத்துக் கொள்ளாத; வெருவந்து-(பகைவனைக் கண்டு) அஞ்சி; வெய்து விரைவில். 569

10.கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

கொடுங்கோல் அரசன் கல்வி அறிவு சிறிதும் இல்லாதவர்களைத் தன் கொடிய ஆட்சிக்குத் துணையாக சேர்த்துக் கொள்வான். அந்தக் கூட்டத்தினரை அல்லாமல் பூமிக்குப் பாரம் வேறு வேண்டியதில்லை.

கொடுங்கோல் அரசனும் கல்வியறிவு இல்லாத அவன் சுற்றமும் ஆகிய அக்கூட்டம் பூமிக்குப் பாரமே அன்றி, வேறு எதற்கும் பயன் இல்லை என்பது பொருள்.

பிணித்தல்-துணையாகச் சேர்த்துக் கொள்ளல்; நிலக்குப்பொறை -பூமிக்குப் பாரம். 570

58. கண்ணோட்டம்


1.கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால், இந்த உலகம் நிலை பெற்றிருக்கின்றது.

கண்ணோட்டம்-தாட்சண்யம்; கழி- மிகுதி; கழிபெரும்-மிகச் சிறந்த; காரிகை-அழகு.