பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

 திருக்குறள்



3. நீத்தார் பெருமை


1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

அறநெறியில் வழுவாது நின்று செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து பின் இல்லற வாழ்விலிருந்து நீங்கித் துறவறத்தை மேற்கொள்ளும் துறவிகளுடைய பெருமையை எல்லா நூல்களும் மேலானதாகப் போற்ற விரும்பும்.

ஒழுக்கம்-(இங்கே) இல்வாழ்க்கை; நீத்தார்-துறந்தவர்; விழுப்பம்-மேன்மை; பனுவல்-நூல். 21

2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

துறந்தவர்களுடைய பெருமையின் அளவைக் கண்டறிந்து கூறமுடியாது; கண்டறிய முயல்வது, இவ்வுலகம் தோன்றியதிலிருந்து எத்தனை உயிர்கள் பிறந்து இறந்தன எனக் கணக்கிட முயல்வதற்குச் சமம் ஆகும். 22

3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

இல்லறம், துறவறம் இவ்விரண்டின் தன்மைகளையும் நன்கு ஆராய்ந்து அறிந்து இல்லறத்தில் தாம் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைவறச் செய்து துறவறத்தை மேற்கொண்ட பெரியோர்களின் பெருமையே உலகில் உயர்ந்ததாக இருக்கிறது.

இருமை-இல்லறம், துறவறம்; சிலர் பிறப்பு, வீடு எனவும் சிலர் இம்மை, மறுமை எனவும் பொருள் கூறுவர். 23

4. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவைகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளும் மதம் பிடித்த யானைகளைப் போன்றவை அவைகளை மன உறுதி என்னும் அங்குசத்தால் அடக்கிக் காக்கவேண்டும். அவ்வாறு காக்க வல்லவர் வான் உலகம் என்னும் நிலத்திற்கு ஒரு விதை போன்றவர்.